அதிமுக மாஜி எம்எல்ஏ கார் மீது தாக்குதல்- பொதுக்கூட்ட மேடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் அதிமுக பொதுக்கூட்ட மேடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
அதிமுகவின் 38வது ஆண்டு விழாவையொட்டி நேற்றிரவு திருச்செந்தூர் வ.ஊ.சி. திடலில் அக் கட்சியின் பொதுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ஆர்.ரமேஷ் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வழியில் அவரது கார் மீது சிலர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். இதில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இது குறித்து ரமேஷ் காவல்நிலையத்தில் புகார் செய்ததையடுத்து சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந் நிலையில் அதிமுக பொதுக் கூட்டம் நடந்த மேடை மீது இரவு 1.45 மணியளவில் பைக்கில் வந்த சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் மேடையின் மேற்கூரை சேதமடைந்தது. ஒரு சில சேர்களும் எரிந்து போயின.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.