தீபாவளி முடிந்ததும் மீண்டும் ஏறியது சிக்கன், மட்டன் விலை
சென்னை: தீபாவளி முடிந்த அடுத்த நாள் முதலே ஆட்டுக் கறி, கோழிக்கறியின் விலையை கடைக்காரர்கள் உயர்த்தி விட்டனர்.
வழக்கமாக ஐப்பசி மாதம் வரும் தீபாவளி இந்த ஆண்டு புரட்டாசியில் வந்தது. அதுவும் புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று வந்து இந்த தீபாவளியை சைவத் தீபாவளியாக்கி விட்டது.
தீபாவளிக்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை என்பதால் அந்த இரண்டு நாட்களும் ஆடு, கோழிக்கறி விற்பனை மகா மந்தமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமையாவது விற்பனை இருக்கும் என கடைக்காரர்கள் நினைத்த நிலையில் அன்று கந்தசஷ்டி விரதம் தொடங்கியதால் அன்றும் கறி போணியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆடு, கோழிக் கறியை நாடி மக்கள் வர ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து இறைச்சி விலையை கடைக்காரர்கள் கிடுகிடுவென உயர்த்தி விட்டனர்.
ஆட்டுக் கறி விலை கிலோவுக்கு ரூ. 60 வரை ஏற்றி விட்டனர். குடல், தலை கறி ரூ.80-க்கும், நுரையீரல், ரத்தம் ஆகியவை ரூ.20 முதல் 30 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
இதே போல், கோழிக் கறியும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை விலை உயர்த்தப்பட்டது.
இப்படி தடாலடியாக கறி விலையை கடைக்காரர்கள் உயர்த்தியுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் காரணமாக பலர் மீன்கள் பக்கம் தங்களது பார்வையைத் திருப்பியுள்ளனர். ஆனால் மீன் விலையும் உயர்வாகவே உள்ளதால் மக்கள் எதைச் சாப்பிடுவது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர்.