உஸ்பெகிஸ்தான்: ஜெ. புகாருக்கு திமுக எம்.பி. மறுப்பு
கரூர்: உஸ்பெகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதருக்கு மத்திய ரசாயணத் துறை அமைச்சர் மு.க.அழகிரி, பரிந்துரைக் கடிதம் அனுப்பினார் என்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் புகாருக்கு இந்த சர்ச்சையில் அடிபட்ட கரூர் தொகுதி திமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், உஸ்பெகிஸ்தான் செல்வதற்கு இரண்டு தொழில் அதிபர்களை மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் செயலர் பரிந்துரை செய்துள்ளதாகவும், அதில் ஒருவர் எஸ்.கே.பி. சுந்தரம் (என்னுடைய மகன்) என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள எஸ்.கே.பி.சுந்தரம், முகுந்த்விஜயன் ஆகியோருக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் எனது உறவினர்களும் இல்லை. இந்தச் செய்தி வெளியான அன்றே மறுப்பு அறிக்கை வெளியிட்டு, ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ளது.
முழு விவரங்களை அறிந்து கொள்ளாமல் எனது பெயரைக் களங்கப்படுத்தும் வகையில் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் அறிக்கையில் நான் 3 முறை மக்களவை உறுப்பினராக இருந்ததாகக் சுட்டிக்காட்டியுள்ளார். நான் 2004-09 மட்டுமே மக்களவை உறுப்பினராக இருந்தேன். மற்ற இரண்டு முறை அதிமுகவினரே மக்களவை உறுப்பினராக இருந்துள்ளனர் என்று சுட்டிக் காட்டியுள்ளார் கே.சி. பழனிச்சாமி.