அதிமுக பாசறை உறுப்பினர்களுக்கு மட்டும்தான் பதவி!
திண்டுக்கல்: எம்எல்ஏ, எம்பி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பதவிகள் போன்றவற்றுக்கு இளைஞர், இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கு மட்டும்தான் தேர்தலின்போதுதான் வழங்கப்படும் என இந்த அதிமுக இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறைகளின் செயலாளர் டாக்டர். வெங்கடேஷ் கூறியுள்ளார்.
சசிகலாவி்ன் அண்ணன் மகனான இவர் தான் இப்போது போயஸ் தோட்டத்தில் கொடி கட்டிப் பறந்து வருகிறார்.
திண்டுக்கல்லில் நடந்த அதிமுக பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய வெங்கடேஷ்,
இந்த நாட்டில் எத்தனையோ அரசியல் தலைவர்கள் தோன்றியிருந்தாலும், இயக்கங்கள் இருந்தாலும் யாராலும் சிந்திக்க முடியாத விஷயத்தை சிந்தித்து லட்சக்கணக்கான இளைஞர் படையை அமைத்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா தான்.
தீய சக்திகளிடம் இளைஞர் சமுதாயம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக இளைஞர், இளம் பெண்கள் பாசறை அமைப்பு தொடங்கப்படுள்ளது.
முன்னேறிச் செல்லும் சமுதாயத்திற்கு இடையில் முடங்கிப்போன தமிழ் சமுதாயத்தை மீட்க நீங்கள் ஜெயலலிதா தலைமையில் அணிவகுக்க வேண்டும். ஜெயலலிதா தலைமையில் மக்களாட்சி அமைப்பதே பாசறைகளின் குறிக்கோள்.
இந்த பாசறை படைகள் இருக்கும் போது இனிமேல் மக்களை ஏமாற்றி யாரும் வெற்றி பெற முடியாது. அதிமுகவில் விசுவாசம் ஒன்று மட்டுமே தகுதியாக கருதப்படும்.
விசுவாசத்தோடு உழைத்தால் ஊராட்சி தலைவர், எம்.எல்.ஏ, எம்.பி பதவிகள் பாசறை உறுப்பினர்களுக்கு கிடைக்கும் என்றார்.