பீடி, சிகரெட் கட்டுப்பாடு- கைதிகள் பெரும் பாடு!
ரேஷன் முறையிலாவது பீடி, சிகரெட் தருமாறு கைதிகள் கோரி வருகின்றனராம்.
சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி பல்வேறு முறைகேடுகளை கண்டுபிடித்தனர். கைதிகளுக்கு சட்டவிரோதமாக பீடி, சிகரெட்டுகள் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை அதிகாரிகள் சப்ளை செய்வது கண்டறியப்பட்டது.
சென்னை புழல் சிறையில் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்ட சிறை டாக்டர் உள்பட 5 அதிகாரிகள் சிக்கினார்கள். இதனால் தற்போது தமிழகத்தில் உள்ள மத்திய ஜெயில்களில் பீடி, சிகரெட் போன்ற பொருட்கள் சப்ளை செய்வதை அதிகாரிகள் நிறுத்திவிட்டனர்.
இதனால் பீடி, சிகரெட் புகைக்கும் கைதிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனராம். தம் அடிக்க முடியாமல் அவஸ்தைப்படும் அவர்கள் பீடி, சிகரெட் தருமாறு கூறி போராட்டங்களையும் நடத்தி வருகின்றனராம். உண்ணாவிரத போராட்டமும் நடத்துகிறார்கள்.
நேற்று சென்னை புழல் சிறையில் பீடி, சிகரெட் கேட்டு 600 கைதிகள் சாப்பிட மறுத்து போராட்டம் நடத்தினார்கள். பாளையங்கோட்டை சிறையிலும் இதுபோன்ற போராட்டத்தில் கைதிகள் ஈடுபட்டனர்.
எங்களுக்கு பாக்கெட் பாக்கெட்டாக, கட்டுக் கட்டாக தர வேண்டாம். ஒரு நாளைக்கு நாலு சிகரெட், பீடி கூடவா தரக் கூடாது என்று உரிமையோடு கேட்டு வருகிறார்களாம்.
இப்படி அழாத குறையாக சிகரெட், பீடி கேட்டுக் கெஞ்சும் 'குழந்தைகளுக்கு' சிறை அதிகாரிகள் ரகசியமாக பீடி, சிகரெட்டை வரவழைத்துக் கொடுப்பதாகவும் தெரிகிறது.