தோல்விக்கு மின்னணு எந்திரங்களே காரணம்-பாஜக
டெல்லி: மகாராஷ்டிரம், ஹரியாணா, அருணாச்சல் பிரதேசத்தில் பாஜகவின் தோல்விக்கு மின்னணு எந்திரங்களே காரணம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைப் போல பாஜக புகார் கூறியுள்ளது.
முதலில் தோல்வியை ஒப்புக் கொள்வதாக அக் கட்சி அறிவித்தது. பின்னர் சிறிது நேரத்தில் நிருபர்களிடம் பேசிய அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி,
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களால் தான் பாஜக தோற்றுள்ளது. இந்த எந்திரங்கள் காங்கிரசின் வெற்றி எந்திரங்களாக மாறிவிட்டன (EVMs have become 'Electronic Victory Machines' for the Congress) என்றார்.
கடந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கும் இந்த எந்திரங்களையே அக் கட்சியின் தலைவர் அத்வானி புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.
எந்திரத்தை குறை கூறுவது தவறு:
ஆனால், பாஜக பொதுச் செயலாளர் விஜய் கோயல் கூறுகையில்,
மின்னணு எந்திரத்தை குறை கூறிவிட்டு தேர்தல் தோல்வியிலிருந்து தப்ப முயல்வது தவறு. அது நக்வியின் தனிப்பட்ட கருத்து. பாஜக அப்படி கருதவில்லை. தோல்விக்கான காரணத்தை முழுமையாக ஆராய வேண்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கே முதல்வர் பதவி: சரத்பவார்
இந்நிலையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருக்கே முதல்வர் பதவி தரப்படும் எனறு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன் இந்தப் பதவிக்கு பவார் கட்சி குறி வைத்திருந்தது. ஆனால், காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றுள்ளதால் விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
முதல்வர் பதவிக்கு காங்கிரசி்ல் கடும் போட்டி:
இப்போது மகாராஷ்டிர முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் சவான் உள்ளார். பதவி தொடர விரும்பும் அவரை எம்எல்ஏக்களிடம் ஆதரவு திரட்டியபடி உள்ளார்.
முன்பு முதல்வராக இருந்த வில்ஷ்ராவ் தேஷ்முக் மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. தற்போது அவர் மத்திய அமைச்சராக உள்ளார். இவரும் முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ளா்.
இதற்காக டெல்லியில் காய் நகர்த்தி வரும் அவர் கூறுகையில், 4 ஆண்டுகள் மராட்டிய மக்களுக்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். என்னை மக்கள் மறக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே மகாராஷ்டிர காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான நாராயண் ரானேயும் முதல்வர் பதவிக்கான போட்டியில் குதித்துள்ளார்.
சிவசேனா-பாஜக ஆட்சியில் இவர் முதல்வராக இருந்தவர். பின்னர் சிவசேனாவிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.
அவர் கூறுகையில், மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவு எடுத்தாலும் அதற்குக் கட்டுப்படுவேன் என்றார்.
இப்படி பலர் போட்டியிட்டாலும் முதல்வர் பதவி யாருக்கு என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியாவே முடிவு செய்வுள்ளார்.