செம்மொழி மாநாடு-பாமக, இடதுசாரிகள் பங்கேற்பு!
சென்னை: கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவுள்ளன. அதே போல பாமகவும் இதில் பங்கேற்கலாம் என்று தெரிகிறது.
9வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அதிமுக, மதிமுக ஆகியவை அறவித்துவிட்டன.
ஆனால், அந்தக் கூட்டணியிலிருந்து ஜெயலலிதாவால் விரட்டி விடப்பட்ட இடதுசாரிகள் இந்த மாநாட்டி்ல பங்கேற்க முடிவு செய்துள்ளன.
மாநாட்டில் பங்கேற்குமாறு சட்டப் பேரவையில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் குழுத் தலைவர்களுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு எழுதப்பட்டுள்ள பதில் கடிதத்தில், மாநாட்டுக்காக எத்தனைக் குழுக்கள் அமைக்கப்படும்?, அதில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் எத்தனை பேர் இடம் பெற வேண்டும் போன்ற விவரங்களை தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவரங்கள் தெரிந்த பின் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் பட்டியல் அரசுக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது.
அதே போல இந்திய கம்யூனிஸ்ட் இந்த விவரங்கள் கிடைத்தபின் தனது கட்சி சார்பில் பங்கேற்போர் பட்டியலை அரசுக்கு அனுப்பும் என்று தெரிகிறது. இன்று சென்னையி்ல் நிருபர்களிடம் பேசிய இக் கட்சியின் தேசியச் செயலாளர் மாநாட்டில் பங்கேற்போம் என்று அறிவித்துவிட்டார்.
பாமக இன்று முடிவு:
இந்த மாநாடில் பங்கேற்பது குறித்த தனது முடிவை பாமக இன்று அறிவிக்கவுள்ளது.
பெரும்பாலும் மாநாட்டில் பங்கேற்கும் முடிவையே பாமக எடுக்கும் என்று தெரிகிறது. இந்தக் கட்சி சமீபத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.