ஸ்வைன் பீதி-தவிர்க்கும் நோயாளிகள்...ஜிப்மர்' வெறிச்!
புதுச்சேரி: புதுவையில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஜிப்மர் மருத்துவமனைக்கு வருவதற்கே மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை வளாகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ஜிப்மர் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவவே கல்லூரி மற்றும் விடுதி ஆகியவை 27ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களைச் சேர்ந்தர்கள் குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் ஜிப்மருக்குத்தான் வருவது வழக்கம்.
ஆனால் தற்போது ஜிப்மருக்குப் போகவே மக்கள் அஞ்சுகிறார்கள். இதையடுத்து புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் திரும்பி வருகின்றனர். இதனால் அங்கு கூட்டம் அதிகரித்துள்ளது.
மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இந்த அச்சத்துக்குக் காரணம். அதை நீக்கும் வகையில் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.