திருப்பூர் ஆர்.டி.ஓ.வுக்கு தகவல் ஆணையம் அபராதம்
திருப்பூர்: தவறான தகவல் தந்தது, மேல்முறையீடு செய்தும் தகவல் தர மறுத்தது போன்ற காரணங்களுக்காக, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) அலுவலக பொது தகவல் அலுவலருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரை சேர்ந்தவர் மணிவண்ணன். வழ்கறிஞராக பணியாற்றி வருகின்றார். இவர், 2008 பிப்ரவரி மாதம், திருப்பூர் ஆர்.டி.ஓ.-வுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு மனு செய்தார்.
அதில், தனது மனைவி மற்றும் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை கேட்டிருந்தார். இதுகுறித்து, அதே ஆண்டு ஏப்ரலில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவுக்கு,10 ரூபாய் ஸ்டாம்ப் மனுவில் ஒட்டவில்லை.
இதையடுத்து விண்ணப்ப முத்திரைத் தாள் 10 ரூபாய்க்கு ஒட்டி அனுப்பவும் என ஆர்.டி.ஓ.பதிலளித்திருந்தார். இதைத் தொடர்ந்து மணிவண்ணனும், ஸ்டாம்ப் ஒட்டி மனு அனுப்பினார்.
ஆனால் இந்த மனுவுக்கு ஆர்.டி.ஓ. தரப்பில் இருந்து பதிலளிக்கப்படவில்லை. மேல்முறையீடு மற்றும் நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை.
இதனால், கடந்த ஜனவரியில் மணிவண்ணன் மாநில தகவல் ஆணையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து, நடந்த விசாரணையில், ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் குமரன் பங்கேற்றார். விசாரணையில், முதலில் அனுப்பிய மனுவில் 10 ரூபாய்க்கு ஸ்டாம்ப் ஒட்டப் பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து பொய்யான தகவல் அனுப்பியதற்கும், பதிவேடு அனுப்பாமல் இருந்ததற்கும் மாநில தகவல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது.
இதுதொடர்பாக, மாநில தகவல் ஆணையர் ராமகிருஷ்ணன், ஆர்.டி.ஓ. அலுவலக பொதுதகவல் அலுவலருக்கு (நேர்முக உதவியாளர்) 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், ஆர்.டி.ஓ. மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பொது தகவல் அலுவலருக்கு விதிக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் அபராதத்தை, திருப்பூர் கலெக்டர், பொது தகவல் அலுவலரின் ஊதியத்தில் இருந்து 30 நாட்களுக்குள் பிடித்தம் செய்து, அரசுக்கு செலுத்துமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தகவல் உரிமை ஆணையத்தின் அதிரடி நடவடிக்கைக்கு ஆளான திருப்பூர் ஆர்.டி.ஓ. முருகேஷ், தற்போது, இடமாற்றலாகி சென்றுவிட்டார். அப்போது, பணியிலிருந்த ஆர்.டி.ஓ. உதவியாளர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.