கரூர் அருகே வேன் கவிழ்ந்து 6 பேர் பலி!
கரூர்: கரூர் அருகே சாலையோர பள்ளத்தில் மாருதி ஆம்னி வேன் கவிழ்ந்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த 9 பேர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்துள்ள பள்ளப்பட்டியில் திருமண விழாவில் கலந்து கொள்ள மாருதி வேனில் வந்தனர்.
விழா முடிந்த பின் அனைவரும் சேலம் நோக்கி புறப்பட்டனர். பள்ளப்பட்டியில் இருந்து கரூர் செல்லும் வழியில் மணல்மேடு என்னுமிடத்தை கடக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர வாய்க்கால் பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில், அனைவரும் பலத்த காயமடைந்தனர். நான்கு பேர் சம்பவ இடத்தில் பலியாயினர். இரண்டு பேர் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் நொறுங்கிக்கிடந்த வேன் இடிபாடுகளில் சிக்கியிருந்தோரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியானவர்கள் நசருல்லா (46) ஆசிக்அலி (45) அப்துல் ஜப்பார் (56) கமால்பாஷா (65) அசின் (3) நசீமா (3) என்று தெரியவந்துள்ளது.
மற்ற மூன்று ஆண்கள் சுயநினைவிழந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால் பெயர் விவரம் தெரியவில்லை.