பாகிஸ்தானில் மீண்டும் தற்கொலை படை தாக்குதல்- 7 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல்களும், தீவிரவாதிகளின் தாக்குதல்களும் பெருமளவில் அதிகரித்து விட்டன. கிட்டத்தட்ட தினசரி ஒரு தாக்குதல் நடந்து வருகிறது.
இன்று காலை பஞ்சாப் மாகாணம், கம்ரா என்ற நகரில், விமானப்படை வளாகத்திற்கு அருகே நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலும் பாதுகாப்புப் படையினரைக் குறி வைத்தே நடந்துள்ளதால் பாகிஸ்தான் அரசு பெரும் அச்சமடைந்துள்ளது.
இன்று காலை கம்ரா கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள விமானப்படை சோதனைச் சாவடியை நோக்கி ஒரு நபர் நடந்து வந்தார். அவரை பாதுகாப்புப் படையினர் சோதனைக்காக தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இதில் அந்த நபர் உள்பட 7 பேர் உடல் சிதறிப் பலியாயினர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.