'வசுந்தரா': ஜேட்லி-நாயுடுவின் 'டபுள் கேம்'
தனது ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர்கள் மூலம் அத்வானிக்கும் அதன் நகலை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு கொடுத்தனுப்பியுள்ள வசுந்தரா அதில், பல கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
நேற்று டெல்லி வந்த வசுந்தரா தனது கடிதத்தை கொடுத்தனுப்பிய கையோடு முன்னாள் பிரதமர் வாஜ்பாயை மட்டும் சந்தித்துவிட்டு ராஜஸ்தான் கிளம்பினார்.
தனது கடிதத்தி்ல் வசுந்தரா கூறியிருப்பதாவது:
ராஜஸ்தானில் ஏற்பட்ட தோல்விக்கு நான் தான் காரணம் என்று சொல்லி என்னை எதி்ர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகச் சொல்லி நெருக்குதல் தந்தீர்கள்.
ஆனால், ராஜஸ்தானைப் போலவே பெரும்பாலான மாநிலங்களில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதற்கு ஏன் எந்தத் தலைவரும் பொறுப்பேற்கவில்லை. இந்த தோல்வி்க்குக் காரணமான 'தேசியத் தலைவர்கள்' எப்படி இன்னும் உங்கள் பதவிகளில் ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார் வசுந்தரா.
முன்னதாக வசுந்தராவிடம் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி ராஜ்நாத் சிங் சார்பில் சுஷ்மா சுவராஜ் பேசினார். அப்போது ராஜே, நான் ராஜினாமா செய்யத் தயார் தான். ஆனால், அருண் ஜேட்லியும் வெங்கையா நாயுடுவும் தான், அடு்த்த எதிர்க் கட்சித் தலைவரை தேர்வு செய்யும் வரை என்னை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கூறினர் என்று கூறியுள்ளார் வசுந்தரா.
இதன்மூலம் ராஜ்நாத்துடன் மறைமுகமாக மோதி வரும் ஜேட்லியும், நாயுடுவும் இந்த விஷயத்தில் டபுள்கேம் ஆடியுள்ள தகவலும் இப்போது வெளியில் வந்துள்ளது.
கட்சி்க் கூட்டங்களில் ராஜ்நாத்துக்கு ஆதரவாகப் பேசிவிட்டு தனிப்பட்ட முறையில் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று ராஜேவிடம் கூறி வந்துள்ளனர்.
முன்னதாக வாஜ்பாயை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய வசுந்தரா, பாஜகவில் பெண் தலைவர்களுக்கு மரியாதை இல்லை. எனக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் நான் பெண் என்பதால் என் பதவியை பறித்துள்ளனர் என்றார்.
ஆர்எஸ்எஸ் தான் வழி நடத்தனும்-சத்ருகன்:
இந் நிலையில் மக்களவைத் தேர்தலை தொடர்ந்து சமீபத்தில் நடந்த 3 மாநில சட்டசபை தேர்தல்களிலும் பாஜக படுதோல்வி அடைந்துவிட்டதால் கட்சியை இனி ஆர்எஸ்எஸ் தான் வழிநடத்த வேண்டும் என்று அக் கட்சியின் எம்பியும் நடிகருமான சத்ருகன் சின்கா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்துதான் பாஜக உருவானது. ஆனால் காலப்போக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பாஜகவுக்கு வருவது நின்று விட்டது.
தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் வரும் நேரத்தில் கட்சி நெருக்கடியான கால கட்டத்தில் உள்ளது.
இந்த நேரத்தில் கட்சிக்குள் நிலவும் குழப்பத்தை தவிர்க்க, பாஜகவை ஆர்எஸ்எஸ் ஏற்று வழி நடத்த வேண்டும்.
எதிரிகளை வீழ்த்த கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் நாங்களே வீழ்ந்து விட்டோம். கட்சிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும் நேரம் வந்து விட்டது.
சுஷ்மாவுக்கு அத்வானி வழி விட வேண்டும்:
ஏசி ரூம்களில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இனியும் பாஜக தலைவர்கள் கட்சி நடத்தக் கூடாது. மக்களை சந்திக்க வேண்டும். கட்சியில் தலைவர்களுக்கு பஞ்சம் வந்து விட்டது. தலைவர்கள் யாருமே சரியாக செயல்படவில்லை.
2014ம் ஆண்டு தேர்தலில் சுஷ்மா சுவராஜை பிரதமர் பதவிக்கு முன் நிறுத்த வேண்டும். அவருக்கு அத்வானி வழி விட வேண்டும் என்றார்.