காங்கிரசிடம் 'பம்மிய' திமுக-மதுரை கூட்டம் 'டாபிக்' மாற்றம்
காங்கிரஸ் தலைமையில் கோபத்தால் திமுக தனது நிலையை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது.
முன்னதாக இந்தக் கூட்டத்தை திமுக அறிவித்தவுடன் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவின் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டை ஆரம்பித்தது.
காங்கிரசின் இந்த 'அதிர்ச்சி வைத்தியம்' காரணமாகவே திமுக தலைமை தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது.
மத்திய அமைச்சருக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் என்பதற்கு பதிலாக, முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு: மதுரை மாநகரில் மாபெரும் பொதுக் கூட்டம் என்று கூட்டத்தின் 'டாபிக்' மாற்றப்பட்டுள்ளது.
நவம்பர் 1ம் தேதி மதுரை மேலமாசி வீதி- வடக்கு மாசி வீதி சந்திப்பில் நடக்கும் இக் கூட்டத்துக்கு மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் இக் கூட்டத்தில் மாநில அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் கவுஸ்பாட்சா, போடி லட்சுமணன், மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன், மூக்கையா, கம்பம் செல்வேந்திரன், பொன்.முத்துராமலிங்கம், சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோர் பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டம் சரியே-தங்கபாலு:
இந் நிலையி்ல இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு,
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் காங்கிரஸ் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. தமிழர்களின் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும். உரிமை பாதிக்கப்படக் கூடாது. 2 மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேச வேண்டும் என்று பிரதமருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி இருக்கிறேன்.
அமைச்சர் ஜெயராம் ரமேசுக்கு எதிராக மதுரையில் திமுகபொதுக் கூட்டம் நடத்துவதிலும், அதில் முதல்வர் பங்கேற்று பேசுவதிலும் தவறு ஏதும் இல்லை.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உள்ளது. மத்திய அரசிடம் நியாயம் கேட்பதில் தவறில்லை. இதில் பிரதமர் தலையிட்டு சரியான தீர்வு காண வேண்டும் என்று நாங்களும் வலியுறுத்தி இருக்கிறோம்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருப்பதால் இதற்கு மேல் எதுவும் சொல்ல இயலாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுத்திருக்கக்கூடாது என்பது எங்கள் கருத்து.
சிபிஐ ரெய்ட்-நோ கமெண்ட்ஸ்:
மத்திய அமைச்சர் ராசா அலுவலகத்தில் சிபிஐ நடத்திய ரெய்ட் பற்றி கருத்து சொல்ல விரும்ப வில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு என்றார்.