பிரதமருடன் சந்திப்பு-திருமாவை 'அவாய்ட்' செய்த திமுக!
டி.ஆர்.பாலு தலைமையில் இலங்கை சென்று வந்த திமுக-காங்கிரஸ் எம்பிக்கள் குழு நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து அறிக்கை அளித்தது
இந்தக் குழுவில் டி.ஆர்.பாலு, கனிமொழி, காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் திருமாவளவனும் இடம் பெற்றதாக தகவல்கள் வந்தன.
ஆனால், அவர் பிரதமரை சந்திக்க அழைத்துச் செல்லப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
திமுகவின் இந்தச் செயலால் திருமாவளவன் கோபத்தில் உள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், திருமாவளன் மீதான காங்கிரஸ் தலைமையின் கோபத்தை குறைக்கவே, அவரை திமுக கூட்டிச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இலங்கைக்குச் சென்று வந்த திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் அங்கு முகாம்களில் தமிழர்கள் மிக நிம்மதியாக இருப்பது போலவும், சிறிய அளவிலேயே பிரச்சனைகள் இருப்பது போலவும் பேட்டி தந்தனர். அறிக்கையும் தந்தனர்.
ஆனால், திருமாவளவன் மட்டும் தான் உண்மை நிலையை வெளியில் சொன்னார்.
அங்கு தமிழர்கள் அல்லல்படுவதாகவும், அந்த நாட்டு அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் அறிக்கை விட்டதோடு பேட்டிகளும் தந்தார்.
இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி போட்ட மூடி மறைக்கும் திட்டம் தவிடுபொடியானது. திருமாவளவனின் இந்த நடவடிக்கைகள் முதல்வர் கருணாநிதியை கோபப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க டெல்லி சென்ற குழுவில் திருமாவளவனுக்கு இடம் தரப்படவில்லை.
(இலங்கை சென்று வந்த திமுக எம்பியான டி.கே.எஸ். இளங்கோவன் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளதால் அவரும் இடம் பெறவில்லை)
டெல்லி செல்லும் தகவலே அவருக்குத் தெரிவிக்கப்படவில்லையாம்.
ஆனால், குழு டெல்லி செல்வதை பத்திரிக்கைகள் மூலம் தெரிந்து கொண்ட திருமாவளவன், டி.ஆர்.பாலு மற்றும் திமுக எம்பிக்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் பலன் கிடைக்கவில்லையாம். அவர்கள் போனை எடுக்கவே இல்லையாம்.
காங்கிரஸ் கோபத்தால் நடவடிக்கை?:
இந் நிலையில் திருமாவளவன் மீதான காங்கிரசின் கோபத்தை அறிந்து தான் அவரை முதல்வர் கருணாநிதி குழுவில் இடம் பெறச் செய்யவில்லை என்றும் சொல்கிறார்கள்.
இலங்கை செல்லும் எம்.பிக்கள் குழுவில் திருமாவளவன் இடம் பெற்றதையே காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையையும் அதிபர் ராஜபக்சேவையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பவர் திருமா. தனது அறிக்கைகள், பேச்சுக்கள் மூலமும் அதை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால் தான் அவரை பிரதமரை சந்திக்கும் குழுவில் இடம் பெறச் செய்யவில்லை முதல்வர் என்கிறார்கள்.
இந்த நிலையில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட் நடத்தியதற்கான 2 முக்கிய காரணங்களில் திருமாவளவனை இலங்கை செல்லும் குழுவில் இடம் பெறச் செய்தது தான் என்றும் கூறுகின்றனர் டெல்லி வட்டாரத்தில்.
அடுத்த காரணம், சோனியா குடும்பத்துக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்-கேரள லாபிக்கு எதிராக திமுக எடுத்துள்ள நிலை என்கிறார்கள்.
எப்படியோ காங்கிரசிடம் நல்ல பெயர் வாங்க திருமாவளவனுக்கு பாடத்தை திமுக புகட்டிவிட்டது.