நக்சலைட்டுகள் வேட்டையில் நாய்ப்படையை ஈடுபடுத்த திட்டம்
டெல்லி: அடர்ந்த காடுகளில் பதுங்கியிருக்கும் மாவோயிஸ்ட் நக்சலைட்களைக் கண்டறியும் பணியில் நாய்ப் படைகளை ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் காவல்துறை சார்பில் நாய்ப் படைகள் அமைக்கப்படவுள்ளன.
வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறியவும், நக்சல்கள் பதுக்கி வைத்துள்ள வெடிபொருட்களைக் கண்டறியும், ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளைக் கண்டறியும் இந்த படையில் இடம் பெறும் நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
ஒவ்வொரு படையிலும் 12 நாய்கள் இடம் பெறும். அதில் ஐந்து நாய்கள், ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிக்கு உதவும். நான்கு நாய்கள் வெடிபொருட்களைக் கண்டறிய உதவும். 3 நாய்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்படும்.
அதேபோல நக்சலைட்டுகள் பாதிப்பு அதிகம் இல்லாத பகுதியிலும் நாய்ப் படைகள் ஈடுபடுத்தப்படும். இந்தப் படைகளில் ஐந்து நாய்கள் இடம் பெறும். அதில் மூன்று நாய்கள் வெடிபொருட்களைக் கண்டறிய உதவும், 2 நாய்கள் தேடுதல் வேட்டைக்குப் பயன்படுத்தப்படும்.
நாடு முழுவதும் 1700 போலீஸ் துணைக் கோட்டங்கள் உள்ளன. இவற்றில் விரைவில் இந்த நாய்ப் படைகள் உருவாக்கப்படும்.