இந்தியாவுக்குள் பெருளவில் தீவிரவாதிகளை அனுப்ப பாக். திட்டம்- ப.சிதம்பரம்
ஆனால், நமது நாட்டின் பாதுகாப்புப் படையினர் எத்தகைய மிரட்டலையும் சந்திக்கும் வகையில் ஆயத்த நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ப.சிதம்பரம் கூறுகையில், மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட சதிகாரர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களைத் தண்டிக்கும் தைரியம் பாகிஸ்தானிடம் இல்லை.
பாகிஸ்தானில் தற்போது தலிபான்கள் வேகமாகப் பரவி வருகின்றனர். இது கவலை தருகிறது. இந்த தீவிரவாத பரவல், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கும் பெரும் மிரட்டலாகும்.
எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி தற்போது இந்தியாவை தீவிரவாதிகள் குறி வைத்து வருவதாக தெரிகிறது. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவுககுள் பெருமளவில் ஊடுறுவ திட்டமிட்டு வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் அவர்கள் ஊடுறுவ திட்டமிட்டு வருகின்றனர். இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தி நாச வேலைகளில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் நமது பாதுகாப்புப் படையினர் இத்தகைய மிரட்டல்களை சந்திக்க ஆயத்த நிலையில் உள்ளனர் என்றார் ப.சிதம்பரம்.