பொங்கல் பண்டிகை - தென் மாவட்ட ரயில்களில் இடமில்லை
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டன.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது சென்னையில் வசித்து வரும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.
சமீப ஆண்டுகளாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஆனால் ரயில்களில்தான் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாகியுள்ளது. தென் மாவட்டங்களுக்கு் செல்லு் அனைத்து ரயில்களிலும், முன் பதிவு தொடங்கும் நாளன்றே சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் நிரம்பி விடுகின்றன. ஆன்லைன் புக்கிங்கே இதற்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமீபத்தில் தீபாவளிக்கும் இதேபோலத்தான் ரெகுலர் ரயில்களில் உடனடியாக டிக்கெட்டுகள் காலியாகி விட்டன.
இந்த நிலையில் தற்போது பொங்கலுக்கும் அதேபோல ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.
ஜனவரி 14-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஊர்களுக்கு செல்வதற்காக ரயில்களில் 90 நாட்களுக்கு முன்பே பயணிகள் முன்பதிவு செய்துவிட்டனர்.
கன்னியாகுமரி, நெல்லை, முத்துநகர், அனந்தபுரி, மலைக்கோட்டை, செங்கோட்டை ஆகிய ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் 290-க்கு மேல் உள்ளது.
ஜனவரி 12 மற்றும் 13-ந்தேதிகளில்தான் பயணிகள் கூட்டம் அலை மோதும். நெல்லை, பாண்டியன், செங்கோட்டை ஆகிய ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் 300-ம் முடிந்துவிட்டது.
இதேபோல் திரும்பி வருவதற்கு ஜனவரி 18 மற்றும் 19-ந் தேதிகளில் நாகர் கோவில், நெல்லை, மதுரையில் இருந்து டிக்கெட் இல்லை.
பயணிகள் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க கேட்டும் சிறப்பு ரயில்கள் விடப்படுவது பற்றி குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
தீபாவளிக்கு நெல்லை வரை பகல் நேர சிறப்பு ரயில் விடப்பட்டது. அதேபோல் பொங்கல் பண்டிகைக்கும் இயக்க வேண்டும். அந்த ரயிலை காலை 6 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்குள் நெல்லை சென்றடையும் வகையில் இயக்க வேண்டும் என்று பயணிகள் விரும்புகிறார்கள்.