பைக்கை வழிறித்து ரூ.13 லட்ச வைரம் கொள்ளை
சென்னை: மோட்டார் சைக்கிளில் வந்த நகைக் கடை ஊழியரை, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், அவர் வைத்திருந்த ரூ. 13 லட்சம் மதிப்புள்ள வைர நகையை திருடிச் சென்றனர்.
சென்னை கீழ்பாக்கத்தில் பிரபல வைர நகைக் கடை உள்ளது. இது மொத்தக் கடை ஆகும். சென்னையில் உள்ள பல்வேறு கடைக்காரர்கள் இங்கிருந்து நகைகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
இங்கு நகைகளை ஆர்டர் செய்வோருக்கு கார்களில் நகைகளைக் கொண்டு செனறு கொடுப்பது வழக்கம். ஆனால் நேற்று கடை ஊழியர் நிலேஷ் சுரானா என்பவர் ரூ.13 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு, கதீட்ரல் ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
எழும்பூர் நாயர் பாலத்தை தாண்டி, உடுப்பி பாயிண்ட் சிக்னல் அருகே வரும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், ஊழியர் சுரானா வைத்திருந்த நகை பையை மின்னல் வேகத்தில் பிடுங்கி சென்று விட்டனர். அப்போது பின்னால் மாநகர பஸ் ஒன்று வந்ததால் கொள்ளையர்கள் எளிதில் தப்பி ஓடி விட்டனர்.
பஸ் மோதாமல் இருக்கவும், நகை பறிபோனதால் நிலைகுலைந்து போனதாலும், சுரானா மோட்டார் சைக்கிளை ஓரம் கட்டியபோது கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.
மக்கள் நெரிசல் மிக்க, போக்குவரத்து மிகுந்த இடத்தில் நடந்த இந்த துணிகர கொள்ளையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக எழும்பூர் போலீஸில் புகார் கொடுத்தார் சுரானா.
போலீஸார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு சுரானா மீது சந்தேகம் வலுத்துள்ளது. இதனால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.