ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான புகார்களில் உண்மை இல்லை - பிரதமர்
ஸ்பெக்ட்ரம் சர்ச்சை தொடர்பாக தாய்லாந்தின் ஹுவா ஹின் நகரில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்திய செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர்,
அமைச்சரவை கூட்டத்தில் என்ன நடைபெற்றது? அல்லது அமைச்சருக்கும், எனக்கும் இடையே என்ன நடந்தது? என்பது போன்ற விவகாரங்களை பொது இடங்களில் வெளிப்படையாக விவாதிப்பது சரியல்ல.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான எதிர்க்கட்சிகளின் புகாரில் உண்மை இல்லை. ஜனநாயக நாட்டில் குற்றச்சாட்டுகள் கூறப்படுவது வழக்கம்தான். ஆனால் அவை உண்மையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல என்றார்.
அமைச்சர் ராஜா ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் புகார் குறித்து கேட்டபோது, அமைச்சரவையில் செய்யப்படும் மாற்றங்கள் பற்றி வெளிப்படையாக விவாதிக்கப்படுவது இல்லை. அதிலும், அன்னிய மண்ணில் இருக்கும் நிலையில், இந்த கேள்விக்கு நான் பதில் அளிப்பது பொருத்தமாக இருக்காது என்றார் பிரதமர்.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் விதிமுறைப்படியே, குறிப்பாக பிரதமரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் ராஜா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி திரும்பினார்..
தனது 3 நாள் தாய்லாந்துப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு இந்தியா திரும்பினார்.
தனது 3 நாள் பயணத்தின்போது சீனப் பிரதமர் வென் ஜியாபோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அருணாச்சல் பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, தலாய் லாமா இந்தியாவின் கெளரவத்துக்குரிய விருந்தினர். அவர் இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல முடியும் என்பதை செய்தியாளர்களிடம் உறுதிபடத் தெரிவித்தார்.
இந்தியா, சீனா இடையிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சமூகமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை சீனப் பிரதமரிடம் வலியுறுத்தினார்.
மேலும், ஜப்பான் பிரதமர் யூகியோ ஹடயோமாவுடனும் பிரதமர் பேச்சு நடத்தினார்.