போர்க் குற்றப் பட்டியலில் பொன்சேகா பெயர்- அமெரிக்க அழைப்பு ரத்து
ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்தவர் பொன்சேகா. இவரது தலைமையில்தான் ராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றது. தற்போது கூட்டுப் படைத் தலைவராக இருக்கிறார் பொன்சேகா.
இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். விடுதலைப் புலிகள் ஆதிக்கம் மிகுந்திருந்த காலத்தில் இவர், கோத்தபயா ராஜபக்சே போன்றோர் இலங்கையை விட்டு வெளியேறி அமெரிக்காவில்தான் சில காலம் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் அமெரிக்க பசிபிக் கமாண்ட்டின் தலைமையகமான ஹவாயில் நடக்கவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்கும், பசிபிக் கமாண்ட் பிரிவின் தலைவர் டிமோதி கீட்டிங்கை சந்திப்பதற்கும் அழைக்கப்பட்டிருந்தார் பொன்சேகா.
இதற்காக பொன்சேகா, பிரிகேடியல் அதுல சில்வா, 2 மெய்க்காப்பாளர்கள் ஆகியோர் துபாய் செல்லும் விமானத்தில் வெள்ளிக்கிழமை கிளம்பினர். சனிக்கிழமை வாஷிங்டன் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
பொன்சேகாவிடம் கிரீன் கார்டு இருப்பதால், அது காலாவதியாகி விடாமல் தவிர்க்க வருடத்திற்கு ஒரு முறை அவர் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும். இதற்காகவே இந்தப் பயணத்தை திட்டமிட்டிருந்தார் பொன்சேகா.
இந்த நிலையில் பொன்சேகாவுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை அமெரிக்க அரசு ரத்து செய்து விட்டது. இத்தகவலை இலங்கைக்கான அமெரிக்க தூதர் பட்ரிசியா புட்னிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை சமீபத்தில் நாடாளுமன்றத்தில், இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டது. அதில் போர்க் குற்றங்கள் தொடர்பான பட்டியலில் பொன்சேகாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
அறிக்கையின் 46வது பக்கத்தில், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் உயிருடன் விடாமல் கொன்று குவிக்க வேண்டும். புலிகள் வசம் உள்ள அனைத்துப் பகுதிகளையும் மீட்டாக வேண்டும். இதற்காக போரின்போது கடைப்பிடிக்கப்படும் எந்த நியதியையும் பார்க்காதீர்கள் என்று தனது தளபதிகளுக்கு ஜூலை 10ம் தேதி அம்பலன்கொடா என்ற இடத்தில் நடந்த கூட்டத்தின்போது உத்தரவிட்டார் பொன்சேகா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதான் இப்போது பொன்சேகாவுக்கு வினையாகியுள்ளது. இப்படிப்பட்ட ஒருவரை அமெரிக்க அரசு அழைப்பு விடுத்து வரவைப்பது சரியாக இருக்காது என்பதாலேயே பொன்சேகாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக அமெரிக்கா கிளம்பியுள்ள பொன்சேகா நவம்பர் 17ம் தேதி திரும்பி வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஹவாய் பயணம் உள்ளிட்டவை ரத்தாகி விட்டதால், நவம்பர் 7ம் தேதியே அவர் இலங்கைக்குத் திரும்பிப் போய் விடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.