ஸ்பெக்ட்ரம்: சுதந்திர இந்தியாவின் மாபெரும் ஊழல்-பாஜக
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை காரணமாக அரசுக்கு ரூ. 60,000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த ஊழல்களிலேயே மிகப் பெரிய ஊழல் இது தான். இந்த ஊழலை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில் அமைச்சர் ராசா ஏதும் அறியாதவர் என்று பிரதமர் மன்மோகன் அறிவிப்பது விசாரணையை தடுமாறச் செய்யும் முயற்சி தான்.
சிபிஐக்கு பொறுப்பான பிரதமர் மன்மோகன் சிங் இந்த விவகாரத்தில் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும். அமைச்சர் ராசா அப்பாவி, குற்றமற்றவர் என்பதைப் போலப் பேசுவது விசாரணையைத் தடுமாறச் செய்யும்.
விசாரணையை பிரதமர் விரும்பவில்லை என்று அதிகாரிகளுக்கு குறிப்பால் உணர்த்தும் முயற்சி தான் இது. இதனால் அதிகாரிகள் இதை முறையாக விசாரிக்காமல் விட்டுவிடக்கூடும்.
பொதுவாழ்வில் நேர்மை தேவை என்று கூறும் பிரதமரே, விசாரணையைச் சீர்குலைக்கும் நடவடிக்கையில் இறங்கக் கூடாது.
நேர்மையான விசாரணை நடைபெற வேண்டுமானால் அமைச்சர் பதவியிலிருந்து ராசா விலக வேண்டும். அல்லது பிரதமர் அவரை நீக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அதிகாரிகளிடம் விசாரணை நடக்கிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுவது ஏற்க முடியாதது. அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் இந்த அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் முடிவுகளை அதிகாரிகள் எடுக்க மாட்டார்கள்.
''அமைச்சர் அப்பாவி, அதிகாரிகள்தான் ஊழல் செய்துள்ளனர்'' என்று விசாரணையின் முடிவு அமைந்துவிடக்கூடாது. அதிகாரிகள் எப்போதுமே அமைச்சர்கள் எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றுகிறவர்கள்தான். இத்துறையின் முக்கிய முடிவுகளை ராசாதான் எடுத்திருக்கிறார். எனவே அவர் விசாரணைக்கும், பிற நடவடிக்கைகளுக்கும் உள்பட்டவரே.
2ஜி அலைக்கற்றை யாருக்கெல்லாம் ஒதுக்கப்பட்டதோ அவர்கள் அந்த சேவையில் ஈடுபடவே இல்லை. அவை எல்லாம் பெயரளவுக்கான நிறுவனங்கள்தான்.
ஸ்பெக்ட்ரத்தை வாங்கியவுடன் அந்த நிறுவனங்களின் மதிப்பு சந்தையில் திடீரென ரூ.9,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. அத்துடன் 3 நிறுவனங்கள் தங்களுடைய பெரும்பான்மையான பங்குகளை ரூ.6,000 கோடி ரூ.7,000 கோடி வரை விலை வைத்து விற்றுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் துறையில் அனுபவம் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் அனுபவமே இல்லாத 9 நிறுவனங்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் ஏலத் தேதி ஏன் நிர்ணயிக்கப்பட்டது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
2007 அக்டோபர் 1 வரையில்தான் இது தொடர்பான டெண்டர்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், திடீரென செயற்கையாக 2007 செப்டம்பர் 25 தான் கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டது. செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 வரையில் பெறப்பட்ட டெண்டர்கள் அப்படியே நிராகரிக்கப்பட்டன. விளையாட்டு தொடங்கிய பிறகு விளையாட்டுக்கான விதிகள் மாற்றப்பட்டன.
வேண்டப்பட்டவர்கள் மட்டும் செப்டம்பர் 25க்குள் டெண்டர் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்கள் தான்.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் பாஜக பிரச்சனை கிளப்பும் என்றார் அருண் ஜேட்லி.