For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவ அத்துமீறல்-விசாரிக்க ராஜபக்சே திடீர் உத்தரவு!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் இறுதிப் போரின்போது இலங்கை ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதா என விசாரிக்க உத்தரகவிட்டுள்ளார் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே. அவரது இந்த திடீர் உத்தரவு இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் தனி ஈழம் கேட்டு மூன்று தசாப்த காலமாக விடுதலைப்புலிகள் போராடி வருகின்றனர். சமாதான வழியில் தங்கள் கோரிக்கை நிறைவேறாது என்பது தெரிந்ததால், பிரபாகரன் தலைமையில் ஆயுதம் ஏந்தி இலங்கை ராணுவத்துடன் போரிட்டனர். இதன் இறுதிக்கட்ட போர் கடந்த மே மாதம் வன்னிப் பெருநிலத்தில் அரங்கேறியது.

இதில் 20000 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களும், ஏராளமான விடுதலைப் புலிகளும் கொடூரமான முறையில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாக சர்வதேச ஏஜென்ஸிகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச போர் நியாயங்களை மீறி விஷ குண்டுகளை வீசி தமிழர்களைக் கொன்ற சிங்கள ராணுவம், இறுதி நாட்களில், கொல்லப்பட்ட தமிழர்கள் மற்றும் குற்றுயிராய் கிடந்த மக்கள் மீது புல்சோர்களை ஏற்றி ரத்தக் குளியல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேபோல, போரின் இறுதி நாளில் சரணடைய வெள்ளைக் கொடுயோடு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர் இலங்கை ராணுவத்தினர். இது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூர நிகழ்வில் சம்பந்தப்பட்ட சிலரே அதை வெளியில் சொல்லியும் வருகின்றனர்.

ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்து வந்தது. ஆனால் மே 2-ந்தேதியும், 18-ந்தேதியும் 170 சம்பவங்களில் போர் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாராளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக நாடுகளும், ஐ.நா.சபையின் மனித உரிமை அமைப்பும் இந்த விஷயத்தில் இலங்கையை பகிரங்கமாக குற்றம் சுமத்தி உள்ளன.

இலங்கையின் போர்க்குற்றங்களை பட்டியலிட்டுள்ள அமெரிக்கா, இது பற்றி சுயமான விசாரணை மேற்கொள்வது அவசியம் என்பதில் உறுதியாக நிற்கிறது.

இதே காரணத்தைக் காட்டி இலங்கைக்கு வழங்கிவந்த ஜிஎஸ்பி வரிச்சலுகையையும் நிறுத்தி விட்டன ஐரோப்பிய நாடுகள். இதனால் இலங்கைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந் நேரம் பார்த்து, இறுதிப் போருக்கு தலைமை தாங்கி நடத்தி, இப்போது புது ஹீரோவாக அவதாரமெடுக்க முயற்சிக்கும் கூட்டுப் படைத் தளபதி சரத் பொன்சேகா அமைதியாக போர்க்கொடி உயர்த்தி வருகிறார். தானே அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் என்றும் கூறி வருகிறார்.

அமெரிக்கா அளித்துள்ள போர்க்குற்ற விசாரணையில் இடம்பெற்றுள்ளோர் பட்டியலில் சரத் பொன்சேகாவின் பெயரும் உள்ளது.

எனவே, ராணுவ அத்துமீறல் குறித்து விசாரிக்க தனி குழு அமைக்க அதிபர் மகிந்த ராஜபக்சே முடிவு செய்து உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுப்பார்களாம்.

இந்த விசாரணை மூலம் பொன்சேகாவை வழிக்குக் கொண்டுவருவது ராஜபக்சே உத்தரவின் பின்னணியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X