For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவபாலன் தாக்கப்பட்ட வழக்கு- என்.கே.கே.பி. ராஜா கைதாகிறார்

Google Oneindia Tamil News

NKKP Raja
ஈரோடு: பெருந்துறையைச் சேர்ந்த சிவபாலன் என்பவரை வீட்டுக்கு அழைத்து தாக்கியதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும், தமிழக கைத்தறித்துறை அமைச்சராகவும் இருந்தவர் என்.கே.கே.பி.ராஜா. இவர் பெருந்துறையை சேர்ந்த மலர்விழி, பழனிச்சாமி ஆகியோரின் நிலத்தை முறைகேடாக அபகரித்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக புகார் தெரிவித்த பழனிச்சாமியின் மகன் சிவபாலனை கடத்தியதாகவும் என்.கே.கே.பி.ராஜா மீது புகார் கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் திமுகவை விட்டு நீக்கப்படவில்லை. மேலும், மாவட்ட திமுக செயலாளராகவும் நீடித்து வந்தார்.

இந் நிலையில் கடந்த 20-ந் தேதி சிவபாலனையும், அவருடைய நண்பர் செல்வகுமாரையும் காஞ்சிக்கோவிலில் உள்ள பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று என்.கே.கே.பி.ராஜா, அவருடைய மனைவி உமா மகேஸ்வரி, உதவியாளர் காஞ்சிகுமார் உள்பட 10 பேர் அடித்து உதைத்து காயப்படுத்தியதாக காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்தில் சிவபாலன் புகார் செய்தார்.

அதேசமயம், சிவபாலன் மற்றும் பலர் அரிவாளுடன் வந்து தன்னையும், தனது மனைவி மற்றும் 4 பேரை வெட்டியதாக என்.கே.கே.பி.ராஜாவும் போலீசில் புகார் செய்தார். மேலும் சில பேண்டேஜ்களையும் போட்டுக் கொண்டு மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டார். ஆனால், இது ராஜாவே ஜோடித்த வழக்கு என்று தெரிகிறது.

இந்த 2 புகார்களையும் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஏற்கனவே நிலத்தகராறு மற்றும் ஆள் கடத்தல் புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து பெருந்துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் இந்த வழக்கையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தும்படி போலீஸ் டி.ஜி.பி. ஜெயின் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு சாம்பசிவம், ஈரோடு மாவட்ட சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சமயத்தில் திடீரென திமுகவிலிருந்து ராஜா நீக்கப்பட்டார். அவரிடமிருந்த செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. அவரது தந்தை பெரியசாமி, ஈரோடு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது ராஜா உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

தலைமறைவு ..

ஆனால் ராஜா உள்ளிட்டோர் தலைமறைவாகி விட்டனர். ராஜாவின் காஞ்சிக்கோவில் வீடு, கவுந்தப்பாடி வீடு உள்பட பல இடங்களிலும் போலீசார் நேற்று தேடிச்சென்றனர். ஆனால், அவர் அங்கு இல்லை. அவரை தொடர்ந்து போலீசார் தேடி வருகிறார்கள்.

விரைவில் ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.

இதற்கிடையே என்.கே.கே.பி.ராஜாவின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க வேண்டும், துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ரேஷன் கார்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சிவபாலனின் தாய்மாமா சுப்பிரமணி என்பவர் நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் சுடலை கண்ணனிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

கட்சி வேறு; மகன் வேறு:

இந் நிலையில் ராஜாவிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ள அவரது தந்தை என்கேகே. பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

எனது மகன் குறித்த விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்லத் தயாராக இல்லை. கட்சியில் எனது சீனியாரிட்டியைக் கருத்தில் கொண்டு, மாவட்டப் பொறுப்பாளராக திமுக தலைமை நியமித்துள்ளது.

இப்பதவியை ஏற்றதில் எனக்கு எவ்விதச் சங்கடமும் இல்லை. எனக்களித்த பொறுப்பில் சரியாக இருப்பேன்.

கட்சி வேறு, மகன் வேறு. இரண்டையும் சம்பந்தப்படுத்தி குழப்பத் தேவையில்லை. அண்மையில் நிகழ்ந்த சம்பவங்களால் ஈரோடு மாவட்ட திமுகவுக்கு எவ்விதப் பின்னடைவுமில்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X