தமிழகத்தில் வெயிலுக்கும், மழைக்கும் சண்டை!!
வட கிழக்குப் பருவ மழை இந்த ஆண்டும் உரிய நேரத்தி்ல தொடங்கவில்லை. வழக்கமாக அக்டோபர் 20ம் தேதி மழை தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை மழை இல்லை.
இந் நிலையில் வங்கக்கடலில் வலு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிவுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று அதிகாலையில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதனால் உதயத்தைப் பார்க்க முடியவில்லை.
பெரும் மழை வரப் போகிறது என்று அனைவரும் நினைத்திருந்த நேரத்தில் லேசான தூறலைப் போட்டு விட்டு மழை போய் விட்டது. அதன் பிறகும் லேசான மேகமூட்டம் காணப்பட்டது. இருப்பினும் மழை இல்லை.
சிறிது நேரத்தில் வழக்கமான வெயில் ஆரம்பிக்க சரி, இனி மழை அவ்வளவுதான் எனறு நினைத்திருந்த நேரத்தில் மீண்டும் மேகக் கூட்டம் சூழ்ந்து லேசான தூறலைப் போட்டது.
இப்படியாக பிற்பகல் வரை மாறி மாறி வெயிலும், தூறலுமாக இருந்ததால் மக்கள் மழை வருமா, வராதா என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு குழம்பினர்.
இந் நிலையில் பிற்பகலில் மீண்டும் வானம் கருத்தது. லேசான தூறல் மழையும் காணப்பட்டது. இருப்பினும் மீண்டும் வெயில் வந்து மழையைத் தடுத்தது.
இப்படியே வெயிலும், லேசான மழையும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது.
இருப்பினும் வடக்கு மாவட்டங்கள் பலவற்றில் லேசான மழை காணப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவானதாக மாறினால் வரும் நாட்களில் பலத்த மழை பெய்யலாம்.
இன்னும் இரண்டு நாட்களில் வட கிழக்குப் பருவ மழை முழு வீச்சில் பெய்யத் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்த மழை டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.
இந்த ஆண்டு சராசரி மழை அளவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இரவு மற்றும் அதிகாலையில்தான் மழை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.