மரகதலிங்கம்-போலீசுக்கு ராம.கோபாலன் பாராட்டு
சென்னை: திருத்துறைப்பூண்டி கோயிலில் திருடுபோன ரூ.50 கோடி மதிப்புள்ள மரகதலிங்க சிலையை மீட்ட தமிழக காவல்துறைக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருத்துறைப்பூண்டி திருக்கோயிலில் திருடு போன பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகதலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டு, திருடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதை விரைந்து கண்டுபிடித்த காவல்துறை அதிகாரிகளுக்கும், பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏடிஜிபி அதிகாரி திலகவதி ஐபிஎஸ்சுக்கும், தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் இந்து முன்னணி மனமாரப் பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
இத்தகைய திருட்டைச் செய்வோர் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் திருட்டு தடுக்கப்படும்.
மேலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ள கோயில்களில் வருமானக் குறைவைக் காரணம் காட்டி நிர்வாகம் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருப்பதால் தொடர் திருட்டும், கொள்ளைகளும் நடக்கின்றன.
ஒவ்வொரு கோயிலிலும் நகைகள், பஞ்சலோக சுவாமி சிலைகள், அசையும், அசையாத சொத்துக்கள் போன்ற விலை மதிப்பற்றவைகளில் பட்டியல் தயார் செய்யப்படவும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்க்கப்படவும் வேண்டும். பாதுகாப்புக் குறைபாடுகளை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவாயனூர், திருக்காரைவாயில் மற்றும் பல கோயில்களிலும் மரகதலிங்கங்கள் காணாமல் போயுள்ளன. இவற்றையும் விரைந்து கண்டுபிடிக்கவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.