For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்விக் கடன் கேட்டு அலையும் பெற்றோர் - அலைக்கழிக்கும் வங்கிகள்

Google Oneindia Tamil News

Education
கல்விக் கடன் கோரி வரும் பெற்றோர்களையும், மாணவர்களையும் அலைய விடும் போக்கை வங்கிகள் சற்றும் மாற்றிக் கொள்ளாமல் உள்ளதால் மாணவ, மாணவியர் பெரும் வேதனையில் உள்ளனர்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட பூலாங்குளம், முத்து கிருஷ்ணபேரி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் என்ஜினியரிங் உள்ளிட்ட உயர் கல்வி படித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்வதால் பிள்ளைகளின் படிப்புக்கு வங்கி கடனையே நம்பியுள்ளனர். ஆனால் இவர்களுக்கு வங்கிகள் கல்வி கடன் கொடுக்க மறுக்கின்றன என்பது வேதனைக்குரியது.

இப்பகுதியினர் கல்வி கடன் கேட்டு அடைக்கலப்பட்டணம், ஆலங்குளம், கீழப்பாவூர், பாவூர்சத்திரம், வீரகேரளபுதூர், சுரண்டை, வீராணம் என ஊர் ஊராய் அலைந்தது தான் மிச்சம். கல்வி கடன் கிடைத்தபாடில்லை.

முத்து கிருஷ்ணபேரியை சேர்ந்த தங்கபெருமாள் தனது மகள் மகாலெட்சுமிக்காகவும், பூலாங்குளம் கணேசராஜ் தனது மகன் அருண் திவாகருக்காவும், சத்துணவு அமைப்பாளர் கணேசன் தனது மகள் லட்சுமி வினோதினிக்காகவும் கல்வி கடன் கேட்டு நடையாய் நடக்கிறார்கள்.

இவர்கள் தவிர பூலங்குளத்தில் 10 பேர், ஆவுடையனூரில் 3 பேர், கரும்பனூரில் 2 பேர், ஆண்டிபட்டியில் 3 பேர், பெத்தநாடார் பட்டியில் 2 பேர் என 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 25க்கும் அதிகமானோர் கல்வி கடனுக்காக காத்திருக்கின்றனர்.

ஒரு வங்கிக்கு சென்றால் அவர்கள் வேறு வங்கிக்கும், அந்த வங்கியினர் மற்றொரு வங்கிக்கும் திருப்பி அனுப்புவதே வாடிக்கையாக உள்ளது. மொத்ததில் இப்பகுதி கிராமத்தினருக்கு கல்வி கடன் என்பது எட்டாத கனியாகவும், கனவாகவும் உள்ளது.

அடைக்கலப்பட்டிணம் வங்கியில் கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்த பலர் நேற்று நெல்லை கலெக்டர் ஆபிசுக்கு திரண்டு வந்து மாவட்ட வருவாய் அதிகாரி ரமண சரஸ்வதியிடம் மனு கொடுத்தனர்.

மாணவர்கள் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் 4 ஆண்டுக்கு ரூ.2 அரை லட்சம் வரை செலவாகிறது. கல்விக் கடன் குறித்து அரசு தொடர்ந்து பேசி வந்தபோதிலும், வங்கிகள் அதில் அக்கறையே காட்டுவதில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.
இது பெற்றோரை வருத்தமடைய செய்துள்ளது.

இந்த விசயத்தில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு கல்வி கடன் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்கின்றனர் மக்கள்.

உச்சவரம்பு இல்லை- சொல்கிறார் ப.சி.

இந்த நிலையில், கல்விக்கடன் வழங்குவதில் எந்தவித உச்ச வரம்புகளும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

கல்விக்கடன் வழங்குவதில் ஒருசில வங்கிகள் தேவையற்ற விதிமுறைகளை வகுத்து செயல்படுவதாக புகார்கள் வந்தன. இது குறித்து இந்திய வங்கிகள் சங்கத்தை தொடர்பு கொண்டேன்

இது போன்ற வரம்புகள், சேவை பகுதி (சர்வீஸ் ஏரியா) கட்டுப்பாடு இல்லை என பதில் அளித்துள்ளனர். இதை நான் ஏற்கனவே அறிவுறுத்தினேன். ஆனால் சிவகங்கையில் உள்ள ஒரு சில வங்கிகள் தேவையற்ற வரம்புகளை விதித்து கல்விக்கடன் வழங்குவதில் தடைகளை ஏற்படுத்துவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இது குறித்து பாரத ஸ்டேட் வங்கியை தொடர்பு கொண்ட போது, கல்வி கடன் வழங்க எந்த வரம்பும் விதிக்கவில்லை என உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே கல்விக்கடன் விண்ணப்பங்களை வங்கிகள் தள்ளுபடி செய்திருந்தால், மீண்டும் அந்த விண்ணங்களை பரிசீலனை செய்யவேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X