2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 22,000 கோடி இழப்பு!- சிபிஐ எப்ஐஆர்
முதலில் வந்தவர்களுக்கு முதலில் உரிமம் என்ற அடிப்படையில், ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் மத்திய தகவல் தொடர்புத் துறை அதிகாரிகள் மிகக் குறைந்த விலையில் அலைக்கற்றைகளை ஒதுக்கி அரசுக்கு கோடி க்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியிருக்கிறர்கள்.
இப்படிச் செய்ததன் மூலம் அவர்கள் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர், தனியாருடன் சேர்ந்து சதி செய்துள்ளனர்.
அதேநேரம் தனக்கும் இந்த முறைகேட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அ ராசா.
ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து, டெல்லியில் உள்ள தொலைத் தொடர்புத் துறை அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக கடந்த 21ம் தேதி, ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், முதல் தகவல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தொலை தொடர்புத் துறையில் உள்ள சில அதிகாரிகளும், தனி நபர்களும் அல்லது நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விவகாரத்தில் கிரிமினல் சதியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கம்பெனிகளுக்கு குறைவான கட்டணத்தில் தொலை தொடர்புத்துறை அதிகாரிகள் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். அரசுக்கு 22 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
அது தனியார் நிறுவனங்களுக்கு லாபமாக அமைந்துள்ளது.இந்த விஷயத்தில் டிராய் விதிமுறைகளுக்கு எதிராக விண்ணப்பதாரர் எண்ணிக்கையில் அளவு நிர்ணயித்துள்ளனர். ஏலம் விடாமல், 2001ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் லைசென்ஸ் வழங்கியுள்ளனர், என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வேண்டியவர்கள் மட்டும் பயன்பெற வேண்டும் என்பதற்காக, விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து விடாமல் இருக்க மோசடி செய்துள்ளனர். ஏல அடிப்படையில் அலைக்கற்றைகளை ஒதுக்காமல் விட்டிருக்கின்றனர்.
ஸ்வான் என்ற நிறுவனத்துக்கு 2 ஜி அலைக்கற்றைகளை வெறும் ரூ. 1537-க்கு விற்றுள்ளார் அமைச்சர். அந்த நிறுவனமோ, தனக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றைகளில் 45 சதவிகிதத்தை மட்டுமே ரூ.4200 கோடிக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளது.
மேலும் யூனிடெக் என்ற நிறுவனம் 22 மண்டலங்களுக்கு ரூ. 1,658 கோடி செலவிட்டு உரிமங்களைப் பெற்றுள்ளது. அந்த நிறுவனமும் தன்னுடைய பங்குகளில் 60 சதவீதத்தை நார்வேயின் 'டெலினார்' என்ற நிறுவனத்துக்கு 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது.
இப்படி 122 மண்டலங்களுக்கும் மிகக் குறைந்த விலை நிர்ணயித்ததால் அரசுக்கு 22000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, என இந்த எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.