நான் 'ஸ்பெக்ட்ரம் ராஜா' தான்!-சொல்கிறார் ராசா
சிஎன்பிசி 18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
இதற்கு முன்னர் இத்துறைக்கு பொறுப்பு வகித்தவர்கள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பின்பற்றிய நடைமுறையைத்தான் நானும் பின்பற்றினேன்.
இது தொடர்பாக பிரதமருடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு எடுத்தேன். மேலும் சட்டத்துறையின் ஆலோசனை பெற்றுத்தான் செயல்பட்டேன்.
இந்த விஷயத்தில் விதிமுறைகள் மீறப்படவில்லை. எந்த நிறுவனத்துக்கும் சலுகைகள் காட்டப்படவில்லை.இதற்கு முன்னர் வகுக்கப்பட்ட விதிகளின்படி, முதலில் வருபவருக்கு முதலில் என்ற அடிப்படையில்தான் உரிமங்கள் வழங்கப்பட்டன.
இப்போது இதைக் குறை கூறும் இதே பாஜகவின் ஆட்சியி்ல் தான் இந்த விதிமுறையே வகுக்கப்பட்டது. இதே விதிமுறையைத்தான் எனக்கு முந்தைய தொலைத் தகவல் தொடர்புத்துறை அமைச்சர்கள் அனைவரும் பின்பற்றினர்.
இந்தப் பிரச்சனையில் நான் பதவி விலக வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. காரணம், நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்னை பதவி விலகச் சொல்லும் ஜெயலலிதா, பாஜகவிடம் இருந்து நான் சான்றிதழ் எதையும் எதிர்பார்க்கவில்லை.
தொலைத் தொடர்பு அதிகாரிகள் ஏதாவது நடைமுறை தவறுகள் செய்திருந்தால் அது சிபிஐ விசாரணையில் தெரியவரும்.
நான் தவறு செய்ததாகச் சொல்லி என்னை மீடியாக்கள் 'ஸ்பெக்ட்ரம் ராஜா' என்று குறிப்பிடுகிறார்கள். அந்த அடைமொழிக்க நான் உகந்தவன் தான். எப்படித் தெரியுமா?.
நான் தொலைத் தொடர்பு அமைச்சராகும முன் 3 ஜி அலைவரிசைக்கான ஸ்பெக்ட்ரமே இல்லை. எல்லாமே பயன்பாட்டில் தான் உள்ளது என்று கருதப்பட்டது.
நானும் அதிகாரிகளும் இரவு பகலாக ஆய்வு செய்து ஏராளமான ஸ்பெக்ட்ரம் மிச்சம் இருப்பதை தெரிந்து கொண்டோம். அதை இப்போது ஏலம் விட இருக்கிறோம். இதன்மூலம் பல ஆயிரம் கோடி வருமானம் அரசுக்கு கிடைக்கவுள்ளது. இதையெல்லாம் மீடியாக்கள் வெளியே சொல்வதில்லை. ஆக, உபரியாக இருந்த ஸ்பெக்ட்ரத்தை வெளியே கொண்டு வந்த நான் 'ஸ்பெக்ட்ரம் ராஜா' தான்.
பாதுகாப்புத்துறை வசம் உள்ள உபரியான ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை பெற்று ஏலம் விடுவது தொடர்பாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழு அந்தத் துறையுடன் பேசி வருகிறது.
இந்த ஸ்பெக்ட்ரமும் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தால் நாட்டில் தொலைபேசிக் கட்டணத்தை இன்னும் குறைக்க முடியும். தொலைத் தொடர்பு கட்டமைப்பையும் பல மடங்கு மேம்படுத்த முடியும்.
என் கனவு 10 பைசாவுக்கு ஒரு லோக்கல் அழைப்பு, 25 பைசாவுக்கு எஸ்டிடி அழைப்பு என்பது தான். இந்த அளவுக்கு கட்டணங்களைக் குறைக்க புதிய ஸ்பெக்ட்ரம் ஏலம் வழி வகுக்கும் என்றார்.
ஸ்பெக்ட்ரத்தை குறைந்த விலைக்கு அரசிடமிருந்து வாங்கி. யுனிடெக் வயர்லெஸ் மற்றும் ஸ்வான் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் தங்களது பங்குகளை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளவே என்று கேட்டதற்கு,
அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கை அடிப்படையில்தான் இது அனுமதிக்கப்பட்டது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது என்றார் ராசா.
செல்போன் சேவையில் உள்ள பெரிய நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு இத்தகைய சதியை செய்துள்ளனவா? என்று கேட்டதற்கு,
மேலும் அதிக எண்ணிக்கையில் தொலைபேசி நிறுவனங்கள் உருவாகாது என்ற எண்ணத்தில் சில நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து இத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அதிக போட்டிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தொலைத் தொடர்பு ஆணையமாந டிராய் விதிகளின்படி அதிக நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததால் போட்டி சூழல் உருவானது. இதுவும் பிரச்சனையை ஏற்படுத்திவிட்டது என்றார் ராசா.