எந்த நேரமும் சட்டமன்ற தேர்தல் வரலாம்-சாமி
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டம் நவம்பர் 7ம் தேதியன்று நடைபெறுகிறது. இதில் இந்துத்துவா, லஞ்ச ஒழிப்பு, சட்டம்-ஒழுங்கு, விலைவாசி கட்டுப்பாடு மற்றும் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுத்தல் ஆகிய 5 அம்ச திட்டத்துடன் எந்த நேரமும் வரக்கூடிய தமிழக சட்டமன்ற தேர்தல் (!!) குறித்தும் விவாதிக்கப்படும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சியும்,பாஜகவும் இணைந்து 234 தொகுதியிலும் போட்டியிட உள்ளோம். இந்தக் கூட்டணி திராவிட இயக்கங்கள் மற்றும் அவர்களுடைய வெளிநாடுகளின் ஊக்கத்தால் இயங்கும் தோழமை கட்சிகளுக்கும் ஒரு மாற்றாக அமையும்.
மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் மதுரையில் ஏற்கனவே ஒரு சமூகத்திற்கு தொல்லை தருபவராக இருந்து வருவதால் அவரை மதுரையில் தங்க விடக்கூடாது.
இம்மாத ஆரம்பத்தில் பொதுத் துறை நிறுவனமான இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனம் அடைந்த பொது லாபத்தில் ஒரு பங்கை தனக்கு வழங்கிட வேண்டும் என்று அழகிரி கூறியுள்ளார். ஒரு கப்பலில் இருந்த அந்த உரத்தை வாங்கி விற்பனை செய்ததில் இந்த லாபம் அந்த நிறுவனத்திற்கு கிடைத்தது. இதில் தனக்கு பங்கு தராவிட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப் போவதாக அதிகாரிகளை அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், எல்லாம் முறையாக நடைபெற்று இருக்கிறது. ஆகவே நாங்கள் விசாரணைக்கு பயப்படவில்லை. தாராளமாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று அந்த அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது.இப்போதுள்ள நிலையில் அந்த அதிகாரிகளின் பெயர்களை நான் தெரிவிக்க விரும்பவில்லை. உரிய நேரத்தில் அறிவிப்பேன்.
இது போன்ற 12 புகார்கள் அழகிரி மீது வந்துள்ளது. இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இந்த ஆதாரத்தை நான் வெளியிட்டால் அதன் அதிகாரிகள் அச்சறுத்தப்படுவார்கள். அதனால் தேவைப்படும் போது ஆதாரத்தை வெளியிடுவேன்.
ஸ்பெக்டரம் அலைவரிசை வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கும் மத்திய அமைச்சர் ராசா மீண்டும் மீண்டும் பொய்யை தான் சொல்லி வருகிறார். இதில் கிடைத்த பணம் முக்கிய புள்ளிகளுக்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான சிபிஐ விசாரணையில் தனது பெயர் இல்லை என்று ராஜா கூறுகிறார். 2வது எப்ஐஆரில்தான் பெயர்கள் பொதுவாக இடம்பெறும். டிராய் வழிகாட்டுதலின் பேரில்தான் அலைவரிசைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் டிராய் அமைப்பின் தலைவர் இதை மறுத்திருக்கிறார் என்றார் சாமி.