மதுரையில் அம்பேத்கார் சிலை அவமதிப்பு-பதற்றம்
மதுரை: மதுரையில் அண்னல் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதையடுத்து பதற்றம் நிலவுகிறது. 5 ஷேர் ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
மருது பாண்டியரின் குருபூஜையையொட்டி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் நேற்று அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை அவனியாபுரம் வழியாக நேற்று காலை ஏராளமானோர் சென்றனர்.
இந் நிலையில் அவனியாபுரம் மெயின் ரோடு சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலையை நேற்று காலை யாரோ சிலர் அவமதிப்பு செய்து விட்டனர்.
இதையடுத்து ஒரு பிரிவினர் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் டிஎஸ்பி மயில்வாகனன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.
அங்கிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பிரமுகர் முனியாண்டி உள்ளிட்டோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீசார் பேச்சு நடத்திக் கொண்டிருந்த போதே சிலைக்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த 5 ஷேர் ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து அப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பை-பாஸ் ரோடு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. மேலும் கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் அவனியாபுரம் மாநகராட்சி காலனி அருகே திரண்டு வந்தனர். ஆட்டோக்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதுகாப்புக்கு நின்றிருந்த டிஎஸ்பி மயில்வாகனனை முற்றுகையிட்டனர்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர்.
அப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.