ஹிலாரி வருகை: பாக்.கில் குண்டு வெடிப்பு-80 பேர் பலி
இஸ்லாமாபாத்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இஸ்லாமாபாத் வந்துள்ள நிலையி்ல் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 80 பேர் பலியாயினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மலைப் பகுதியான தெற்கு வசிர்ஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவமும் அமெரிக்க போர் விமானங்களும் தாக்கி வருகின்றனர்.
இதையடுத்து தலிபான்கள் பெஷாவர் உள்ளிட்ட பாகிஸ்தானின் பிற பகுதிகளில் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளனர். இன்று நடந்த தாக்குதலும் தற்கொலைத் தாக்குதலாகவே கருதப்படுகிறது.
பெஷாவர் நகரில் ஒரு மார்க்கெட் பகுதியில் இன்று காலை இந்த கார் குண்டு வெடித்துச் சிதறியதில் 80 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். பல கடைகளும் இடிந்து விழுந்தன.
இந்த இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானவர்கள் சிக்கிக் கிடக்கின்றனர். ஒரே மாதத்தில் பெஷாவரில் நடந்துள்ள 3வது வெடிகுண்டு தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானில் தாக்குதல்-6 ஐ.நா. அதிகாரிகள் பலி
இந் நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஐ.நா. விருந்தினர் விடுதியில் இன்று தலிபான் தீவிரவாதிகள் பயங்கர தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இதில் 6 ஐ.நா. அதிகாரிகள், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும் பலரை தீவிரவாதிகள் பயணக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளதையடுத்து அவர்களை மீட்க அமெரிக்க, ஆப்கானி்ஸ்தான் படைகள் விரைந்துள்ளன.
இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது. இத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். 3 தீவிரவாதிகள் இத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்தபோது அந்த இல்லத்தில் 20 ஐ.நா. ஊழியர்கள் இருந்தனர்.
11 பாக் ராணுவத்தினர் பலி:
இந் நிலையில் வசிர்ஸ்தானில் பகுதியில் நேற்று நடந்த கடும் சண்டையில் 11 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 11 பேர் பலியாகியுள்ளனர்.