அமெரிக்கரை வைத்து இந்தியாவைத் தாக்க லஷ்கர் சதி- முறியடித்த எப்பிஐ.
வாஷிங்டன்: மும்பைத் தீவிரவாதத் தாக்குதலை நிகழ்த்திய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு, அமெரிக்கர் ஒருவரை வைத்து இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது. இதை உரிய நேரத்தில் கண்டுபிடித்து தடுத்துள்ளது அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.
அந்த அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் டேவிட் கோல்மேன் ஹெட்லி (49). இந்த மாத தொடக்கத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எப்பிஐயின் கூட்டு தீவிரவாத தடுப்புப் படைப் பிரிவு இந்த கைதை மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு, பிலடெல்பியா வழியாக செல்ல அவர் திட்டமிட்டிருந்தபோது ஓ ஹேர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சிக்கினார் டேவிட்.
அவர் மீது தீவிரவாத தாக்குதலுக்குத் திட்டமிட்டது, 2005ம் ஆண்டு முகம்மது நபிகள் குறித்து கார்ட்டூன் வெளியிட்ட டென்மார்க் நாட்டு பத்திரிக்கைக் குழுவினரைத் தாக்கத் திட்டமிட்டது ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவருடன் இருந்த, பாகிஸ்தானில் பிறந்து கனடா குடியுரிமை பெற்றவரான தவால் ஹூசேன் ராணா (48) என்ற நபரும் கைது செய்யப்பட்டார். இவர் சிகாகோவில் வசித்து வந்தார். இருவரையும் அக்டோபர் 18ம் தேதி எப்பிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கைதான ஹெட்லிக்கு, இலியாஸ் காஷ்மீரி என்ற தீவிரவாதத் தலைவர் மற்றும் லஷ்கர் அமைப்பின் பல்வேறு தலைவர்களுடன் நல்ல தொடர்பு இருந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரிவு ஹர்கத் உல் ஜிஹாத் இஸ்லாமி அமைப்பின் செயல் தலைவராக இருக்கிறார். தற்போது காஷ்மீரி, வசிரிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக நம்பப்படுகிறது.
ஹெட்லியுடன் தொடர்புடைய மேலும் இரு தீவிரவாதத் தலைவர்கள் குறித்த விவரங்களையும் எப்பிஐ சேகரித்துள்ளது. ஆனால் அந்த விவரங்களை அது வெளியிடவில்லை.
எப்பிஐ இதுதொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில், 2009ம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், லஷ்கர் உறுப்பினர் ஏ- என்பவருடன் தொடர்ந்து பல்வேறு இமெயில் தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளார் ஹெட்லி. அதில் ஒரு மெயிலில் டென்மார்க் திட்டம் என்னவானது என்று கேட்டுள்ளார்.
மேலும், இந்திய பயணம் குறித்தும் கேட்டுள்ளார். அதற்கு லஷ்கர்-ஏ அளித்த பதிலில், இந்தியாவுக்குச் சென்று புதிய தீவிரவாதத் தாக்குதலுக்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராயுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன் மூலம், இந்தியாவிலும், டென்மார்க்கிலும் தீவிரவாத தாக்குதல்களை நடத்த ஹெட்லி, லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு உதவியாக இருந்துள்ளார் என்பது தெரிய வருகிறது என்று எப்பிஐ தெரிவித்துள்ளது.