புதிய நிபுணர் குழு-உச்ச நீதிமன்ற யோசனையை நிராகரித்த கேரளம்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பலம் என்ன, அதில் எத்தனை அடிவரை நீரை தேக்கலாம் என்பது குறி்த்து ஆராய புதிதாக நிபுணர் குழுவை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் பெஞ்ச் கூறிய யோசனையை கேரளா நிராகரித்துவிட்டத.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்க அனுமதிக்க வேண்டும், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும், புதிய அணை கட்டுவதற்கு சர்வே நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் டி.கே. ஜெயின், முகுந்தக சர்மா, ஆர்.எம். லோதா அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அணையில் எந்த அளவு வரை நீரைத் தேக்கலாம், அணையின் பலம் என்ன என்பது குறித்து சோதனை செய்ய தமிழகம், கேரளம், மற்றும் மத்திய நீர் வளக் கமிஷன் ஆகியவை சார்பில் நிபுணர்கள் அடங்கிய முத்தரப்பு குழுவை நியமிக்கலாம் என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.
ஆனால், இந்த யோசனையை கேரள அரசின் வழக்கறிஞர் நிராகரித்தார்.
கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன் கூறுகையில், கடந்த முறையும் இதேதான் நடந்தது. தமிழகம் சார்பில் நியமிக்கப்படும் பிரதிநிதி அந்த மாநிலத்துக்குச் சாதகமாகவும் கேரளம் சார்பில் நியமிக்கப்படுகிறவர் கேரளத்துக்குத் சாதகமாகவும் கருத்து தெரிவித்தார்கள்.
மத்திய அரசு நியமித்தவர்களின் போக்கால் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இப்போது நீங்கள் மத்திய அரசு சார்பில் 3 உறுப்பினர்களை நியமிக்கலாம் என்கிறீர்கள். மீண்டும் அதிக உயரம் வரை தண்ணீரைத் தேக்கலாம், அணைக்கு ஆபத்து இல்லை என்று தான் கூறப்படும். இதை நாங்கள் ஏற்கத் தயாராக இல்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், எங்கள் யோசனையை அப்படியே நிறுத்திக் கொள்கிறோம், இந்த பிரதான வழக்கு விசாரணை தொடரட்டும் என்றனர்.