ராஜபக்சே நாளை திருப்பதி வருகை!
முன்னதாக 3 நாள் புனிதப் பயணமாக அவர் ராஜபக்சே நேற்று நேபாளம் வந்தார். அங்கும் அவருக்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராஜபக்சேவுடன் உயர் மட்டக் குழுவும் உடன் வந்துள்ளது. புத்தர் பிறந்த இடமான லும்பினிக்கு ராஜபக்சே முக்கியமாக புனிதப் பயணம் மேற்கொள்கிறார். தெற்கு நேபாளத்தில் லும்பினி உள்ளது.
தனி விமானம் மூலம் காத்மாண்டு வந்த ராஜபக்சேவுக்கு திரிபுவன் விமான நிலையத்தில், துணைப் பிரதமர் சுஜாதா கொய்ராலா, கலாச்சாரத் துறை அமைச்சர் மினேந்திர ரிஜால் ஆகியோர் வரவேற்பளித்தனர்.
நேபாள அதிபர் ராம் பரண் யாதவ், பிரதமர் மாதவ குமார் நேபாள் மற்றும் அமைச்சர்கள், எம்.பிக்களை சந்திக்கவுள்ளார் ராஜபக்சே.
வெள்ளிக்கிழமை லும்பினி செல்லும் ராஜபக்சே அங்கு இலங்கை அரசு கட்டியுள்ள புத்த விகாரையைத் திறந்து வைக்கிறார்.
கடந்த மே மாதமே ராஜபக்சே லும்பி செல்வதற்காக நேபாளம் வந்திருந்தார். ஆனால் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதத் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து தனது நேபாள பயணத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்பி விட்டார்.
நேபாள நாடு குடியரசு நாடான பின்னர் அங்கு சென்ற முதல் வெளிநாட்டு அதிபர் ராஜபக்சே என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தனது நேபாள பயணத்தை முடித்துக் கொண்டு நாளை திருப்பதி கோவிலுக்கு வருகிறார்.
நாளை காலை 11 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வரும் அவர் கார் மூலம் திருப்பதி மலைக்கு செல்கிறார்.
மதியம் 1.30 மணிக்கு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதையடுத்து ரேணிகுண்டா, திருப்பதி ஆகிய இடங்களில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ரேணிகுண்டாவில் இருந்து ராஜபசே திருப்பதி செல்லும் வழி நெடுகிலும் போலீஸார் நிறுத்தப்படவுள்ளனர்.
ராஜபக்சேவின் வருகை கடந்த மாதமே முடிவு செய்யப்பட்டுவிட்டாலும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு கடைசி நேரம் வரை மத்திய அரசு ரகசியம் காத்து வந்தது.
இன்று ரேணிகுண்டாவிலும் திருப்பதியிலும் நடந்த பாதுகாப்பு ஏற்பாடுகளால் தான் ராஜபக்சே வருகை வெளியுலகுக்கே தெரிந்தது. ஆனாலும் அவரது வருகை குறித்து மத்திய அரசோ-ஆந்திர அரசோ இதுவரை உறுதி செய்யவி்ல்லை.