கள்ள துப்பாக்கி தயாரி்ப்பு-8 பேர் கைது
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கள்ள துப்பாக்கி தயாரித்து விற்று வந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோரப்பகுதி, சுற்றுபுற பகுதிகளில் கள்ள துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள் தாயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
டிஐஜி கண்ணப்பன், எஸ்பி அஸ்ரா கார்க் உத்தரவுபடி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் குப்புசாமி, தென்காசி இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, சுரேஷ்குமார், உள்ளிட்ட தனிப்படையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு தொடர்பான வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது.
தென்காசியில் மோட்டார் பைக்கில் வந்த புன்னயாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த வைரமுத்து, வாசுதேவநல்லூர் தலையணை காணிகுடியிருப்பை சேர்ந்த ரவிதாமஸிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் இருந்து ஒரு ரிவல்வார், ஒரு நாட்டு ஓற்றைகுழல் துப்பாக்கி, ரிவல்வார தோட்டா 3, 10 டெட்டனேட்டர்கள், 16 காலி தோட்டா, வேல்கம்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் துப்பாக்கி செய்து கொடுத்தவர் விகேபுரத்தை சேர்ந்த துரைசாமி மகன் ஆழ்வார் என தெரிய வந்தது. ஆழ்வார் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து ஒரு ஓற்றை குழல் துப்பாக்கி, துப்பாக்கி செய்ய பயன்படுத்த கூடிய இரும்பு குழாய்கள், கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக புளியங்குடியை சேர்ந்த பெரியசாமி, தெற்கு காணிகுடியிருப்பை சேர்ந்த தினகர், காவேரி என்ற காபிரியேல், அருளாட்சியை சேர்ந்த சிங்கதுரை, புளியங்குடியை சேர்ந்த தங்கம், கைது செய்யப்பட்டனர். 2 நாட்டு கைதுப்பாக்கிகள், 35 கைதுப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.