திருச்சி: தண்டவாளத்தில் விரிசல்-தப்பிய ரயில்கள்
திருச்சி: திருச்சி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டிருந்தது. இந்த தண்டவாளம் வழியாக சென்ற சென்னை- மங்களூர், சென்னை- மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிர்ஷ்டவசமாக தப்பின. மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் தடுத்து நிறுத்தப்பட்டது.
சென்னையில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. இன்று காலை 5.10 மணிக்கு அந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்தை நெருங்கியது.
3வது பிளாட்பாரத்தில் ரயில் நிற்க வேண்டும். அப்போது அந்த தண்டவாளத்தில் தண்டவாளம் இரண்டாக உடைந்திருந்ததை ரயில்வே போலீஸ் ஏட்டு ராஜலிங்கம் என்பவர் பார்த்து திடுக்கிட்டார்.
இதையடுத்து அதிகாரிகளை அவர் உஷார்படுத்தினார். இதையடுத்து 1வது பிளாட்பாரத்துக்கு ரயிலை கொண்டு செல்லுமாறு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் டிரைவருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் போனது.
இதைத் தொடர்ந்து ரயில் 1வது பிளாட்பாரத்துக்கு அனுப்பப்பட்டது. பின்னர் உடைந்த தண்டவாளத்தை சரி செய்யும் பணி முடுக்கி விடப்பட்டது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் சென்ற பின்னர் உடைப்பு சரி செய்யப்பட்டது.
இந்த தண்டவாளம் வழியாகத்தான் மங்களூர் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்றிருந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவை தப்பின.
செந்தூர் எக்ஸ்பிரஸ் தினமும் ஓடும்!
இந் நிலையில் தெற்கு ரயில்வே கால அட்டவணை இன்று நடந்தது. தெற்கு ரயில்வே தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ரயில்வே இணையமைச்சர் அகமது கலந்து கொண்டு புதிய கால அட்டவணையை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ரயில் பெட்டிகள் பற்றாக்குறையாக இருப்பதால் இந்த ரயிலை தினசரி இயக்க முடியவில்லை.
ரயில்வே போர்டுக்கு கூடுதல் பெட்டிகள் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் பெட்டிகள் வந்தவுடன் படிப்படியாக இந்த ரயில் தினசரி இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே புதிய அகல ரயில் பாதை பணிகள் வேகமாக நடந்துகொண்டு இருக்கிறது. இப்பணிகள் இம்மாத இறுதியில் நிறைவடைந்து விடும். தொடர்ந்து ரயில் கமிஷன் ரயில் பாதையை ஆய்வு செய்த பின்னர் மெயின் லைன் பாதையில் ஜனவரி மாதம் முதல் ரயில்கள் இயக்கப்படும்.
ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் மாவோயிஸ்டுகளின் தாக்குதல் இருப்பதால் அனைத்து ரயில் நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் அனைத்தும் பேசின் பாலம் ரயில் நிலையத்தில் சுமார் 10 நிமிடத்திற்கு மேல் நிற்பதால் பயணிகள் அவதிப்படுவதாக கூறுகின்றனர்.
கும்மிடிப்பூண்டி மற்றும் அரக்கோணம் மார்க்கத்திற்கான ரயில்வே லைன் பேசின் பாலம் அருகே தான் பிரிந்து செல்கிறது. இதனால் சிக்னல் கிடைக்காமல் அங்கு ரயில்கள் நிற்க நேரிடுகிறது. இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அப்பகுதியில் கூடுதல் ரயில் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு எம்பி தொகுதியிலும் டிக்கெட் முன்பதிவு கவுன்டர் இல்லாத ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுன்டர்கள் அமைக்கப்படும். பயணிகள் வசதிக்காக 2008-09ம் ஆண்டு 912 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. 200910ம் ஆண்டில் 1,026 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இதன் மூலம் ரயில்வேக்கு ரூ. 30 கோடி வரை வருமானம் கிடைத்துள்ளது.
பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள்...
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி நாகர்கோவில், தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
தெற்கு ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைவு என்று சொல்வது தவறு. பணிகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் இரட்டை ரயில் பாதை அமைத்தல், அகல ரயில் பாதை அமைத்தல் போன்ற பணிகளுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
139 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை ரயில் பாதை, 332 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகல ரயில் பாதை, 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய வழித்தடம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் ரயில்வே துறை செய்து வருகிறது.
பின்னர் தமிழகத்தில் இந்த ஆண்டு எட்டு புதிய ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்தார் அகமது.
அவை...
திருநெல்வேலி - பிலாஸ்பூர் இடையே வாரம் ஒரு முறை சூப்பர் பாஸ்ட் ரயில். அவா- திருநெல்வேலி மார்க்கத்தில் திருவனந்தபுரம் வழியாக வாரம் 3 முறை எக்ஸ்பிரஸ்.
ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு மதுரை வழியாக வாரம் 3 முறை சூப்பர் பாஸ்ட் ரயி்ல், சோரனூர்-நிலாம்பூர் இடையே தினசரி பாசஞ்சர் ரயில்.
கோவை- சோரனூர் இடையே வாரத்தில் 6 நாட்கள் பாசஞ்சர் ரயில். யஷ்வந்த்பூர் - கச்வேலி இடையே வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில், மாட்கோன் - கேரளா இடையே வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில்.
மங்களூர்- கச்வேலி இடையே வாரத்தில் 3 நாட்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படும்.
சென்னை - டெல்லி நிஜாமுதீன் டுரன்டோ எக்ஸ்பிரஸ் இனி வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படும் எனவும் அகமது தெரிவித்தார்.