எதியூரப்பாவுக்கு எதிராக 67 எம்எல்ஏக்கள்!
முதல்வர் எதியூரப்பாவக்கு எதிராக அமைச்சர்களான ரெட்டி சகோதர்கள், சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டார், எம்எல்ஏ ரேணுச்சாச்சாரியா என 3 கோஷ்டிகள் கைகோர்த்துக் கொண்டுவிட்டன.
மொத்தமுள்ள 117 பாஜக எம்எல்ஏக்களில் எதியூரப்பாவுக்கு 50 பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது. மற்றவர்கள் ரெட்டி-ஷெட்டார் கோஷ்டி பக்கம் சாய்ந்துவிட்டனர். முதலில் இந்த எதிர்கோஷ்டியில் 30 எம்எல்ஏக்களே இருந்தனர். ஆனால், ரெட்டி சகோதரர்கள் விரிக்கும் வலையில் மேலும் அதிகமான எம்எல்ஏக்கள் சிக்கி வருவதால் அவர்களது தரப்பு பலமடைந்து வருகிறது.
இதனால் எதியூரப்பாவின் நிலைமை மோசமாகியுள்ளது. எதியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியே ஆக வேண்டும் என்று கூறும் ரெட்டி சகோதரர்கள், சபாநாயகர் ஷெட்டாரை முதல்வராக்க ஒப்புக் கொண்டுவிட்டனர். இதனால் அவரும் எம்எல்ஏக்களுக்கு வலை விரிக்க ஆரம்பித்துள்ளார்.
ஆனால், ரெட்டி சகோதரக்களை ஒடுக்க விரும்பும் முன்னாள் பிரதமர் தேவே கெளடாவும் அவரது மகனான முன்னாள் முதல்வர் குமாரசாமியும் எதியூரப்பாவுடன் கைகோர்க்கத் தயார் என்று அறிவித்துள்ளனர்.
27 எம்எல்ஏக்கள் கொண்ட இவர்களது மதசார்பற்ற ஜனதா தளம், இது தொடர்பாக எதியூரப்பாவிடம் பேசியுள்ளது.
மேலும், கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜையும் சந்தித்துவிட்டு வந்துள்ளார் குமாரசாமி. அப்போது எதியூரப்பாவுக்கு ஆதரவு தர தயார் என்று குமாரசாமி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
எதியூரப்பாவுடன் கூட்டணி அமைத்து முதல்வர் பதவியைப் பிடித்த குமாரசாமி பின்னர் அவருக்கு முதல்வர் பதவியை விட்டுத் தர மறுத்ததால் அவரது பதவி பறிபோனது நினைவுகூறத்தக்கது. இதையடுத்து தனியே தேர்தலை சந்தித்த எதியூரப்பா தலைமையிலான பாஜக தனித்தே ஆட்சியைப் பிடித்தது.
எதியூரப்பாவுடனான மோதல் ஒருபக்கம் இருந்தாலும் குமாரசாமிக்கும் ரெட்டி சகோதரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் மோதல் இருந்து வருவதால் இம்முறை எதியூரப்பாவுக்கு உதவ அவர் முன் வந்துள்ளார்.
அதே நேரத்தி்ல் 77 எம்எல்ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் இந்த பாஜக மோதலை ரசித்தபடி ஆட்சி கவிழாதா என்று காத்துக் கொண்டுள்ளது.
இந் நிலையில் பெங்களூரில் 3 நாள் முகாமிட்டு பிரச்சனையைத் தீர்க்க முயன்ற அருண் ஜேட்லி தனது முயற்சியில் தோல்வியடைந்து டெல்லி திரும்பிவிட்டார்.
இதையடுத்து ஷெட்டார், ரெட்டி சகோதரர்கள், அதிருப்தி அமைச்சர்களை பாஜக மேலிடம் டெல்லிக்கு அழைத்துப் பேசி வருகிறது. ரெட்டிகளுக்கு மிக நெருக்கமான சுஷ்மா சுவராஜ் மூலமாக சிக்கலைத் தீர்க்க பாஜக தலைமை முயல்கிறது. ராஜ்நாத் சிங்கும் அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறார். அடுத்து அத்வானியும் இந்த அதிருப்தியாளர்களுடன் பேசவுள்ளார்.
இந் நிலையில் பிரச்சனையைத் தீர்க்க, அதிருப்தி கோஷ்டியில் உள்ள சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு துணை முதல்வர் பதவி தர எதியூரப்பா முன் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.