அணு ஒப்பந்தம் இந்தியாவுக்கான பாஸ்போர்ட்-புஷ்
டெல்லி: நியூயார்க்கில் நடந்த தீவிரவாதத் தாக்குதலும் மும்பையில் நடந்த தாக்குலும் ஒன்றே. அமெரிக்கா-இந்தியா இரு நாடுகளுக்கும் ஒரே மாதிரியான சவாலைத் தான் சந்தித்துக் கொண்டுள்ளன என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறினார்.
இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் லீடர்ஷிப் சம்மிட் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ளார் புஷ்.
இன்று இந்த மாநாட்டில் புஷ் பேசுகையில், இந்தியா-அமெரிக்கா இடையே கையெழுத்தான அணு ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு உலக அரங்கில் உரிய கிடைக்க வழி ஏற்படும். அது உலக அரங்கில் நுழைய இந்தியாவுக்கான பாஸ்போர்ட்.
இந்தியாவுக்குத் தேவையான மின் சக்திக்கான எரிபொருள் இனி தாராளமாகக் கிடைக்கும். இதன்மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் பலமடையும், வளர்ச்சியடையும்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை வென்றே ஆக வேண்டும். இல்லாவிட்டால், அவர்களுக்கு மீண்டும ஒரு பாதுகாப்பான நாடு கிடைத்துவிடும் என்றார்.
மன்மோகன் சிங் விருந்து:
முன்னதாக நேற்று அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் மதிய விருந்தளித்தார்.
அப்போது புஷ் இந்தியாவின் சிறந்த நண்பர் புஷ் என்று பிரதமர் புகழாரம் சூட்டினார்.
இந்த விருந்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
'தீவிரவாதிகள் கையில் அணு ஆயுதம்':
இந் நிலையில் தீவிரவாதிகள் கையில் அணு ஆயுதம் சிக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகி்ஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் வெளியுறவு கொள்கை பற்றி இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில்,
அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்கள் எளிதில் திருடப்படுவதற்கும் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்தப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாகிவிட்டன.
அணு மூலப் பொருள்கள் திருடப்படுவதை உடனடியாக நாம் தடுக்காவிட்டால் அவை பயங்கரவாதிகளின் கையில் சிக்கிவிடும் அபாயம் உள்ளது.
வட கொரியா, ஈரான், சிரியா போன்ற நாடுகளில் செறியூட்டப்பட்ட யுரேனியம் தாராளமாகக் கிடைக்கிறது. இதை நாம் தடுக்காவிட்டால் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும்.
அணு ஆயுத ஆபதில்லா நாடு என்று எந்த ஒரு நாட்டையும் கூற முடியாது. அதுபோல் அணு ஆயுத ஆபத்தை எந்தவொரு நாடும் தனியாக எதிர்கொள்ளவும் முடியாது.
ஆரம்ப காலத்தில் வல்லரசுகள் மற்றும் பெரிய நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்களை கொண்டிருந்தன. இதனால் அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருந்தது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.
எனவே அணு ஆயுத ஆபத்தை எதிர்கொள்ள ஐ.நா.வின் அணு ஆயுத கண்காணிப்பு அமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு 'சூடு':
இந் நிலையில் பெஷாவர் நகரில் 120 பேர் பலியாகக் காரணமாக இருந்த குண்டு வெடிப்புகள் நடந்த இடத்தைப் பார்வையிட்ட ஹிலாரி நிருபர்களிடம் பேசுகையி்ல்,
அல்-கொய்தா, தலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலாக உள்ளனர். பொதுவாக சொல்ல வேண்டுமென்றால் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் அச்சுறுத்தலாக உள்ளனர்.
எனவே பாகிஸ்தானை நான் கேட்டுக் கொள்வதெல்லாம் தீவிரவாதம் ஒழிய வேண்டுமென்றால் நீங்கள் அல்-கொய்தாவிடம் இருந்து விலக வேண்டும் என்பது தான்.
தீவிரவாதத்தில் இருந்து பாகிஸ்தான் தப்ப வேண்டுமென்றால் அல்-கொய்தா தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டும். அதுதான் ஒரேவழி என்றார்.
இதன்மூலம் அல்-கொய்தாவுடன் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளதை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார் ஹிலாரி.