நதிகள் இணைப்பால் சூழலுக்கு பேராபத்து-பிரதமர்
டெல்லி: நதி நீர் இணைப்பால் விவசாயம் பெரும் பலனை அடையும். அதே வேளையில், சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பை சந்திக்கும், நிவர்த்தி செய்ய முடியாத இழப்பை அது சந்திக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நடந்து வரும் இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் மாநாட்டில் கலந்து கொண்டு சிங் பேசுகையில், நதி நீர் இணைப்பு குறித்து அவசரப்படக் கூடாது. இதுகுறித்து நிபுணர்களின் கருத்துகளை அறிய வேண்டும். இதில் மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் செயல்பட வேண்டியது அவசியம்.
அதற்காக நதி நீர் இணைப்புத் திட்டங்களை நான் ஒரேயடியாக நிராகரித்து விடவில்லை. இந்த திட்டங்களால், விவசாய நிலங்கள் விரிவடையும்.
உலக வெப்பமயமாக்கல் குறித்து அனைவரும் தீவிரமாக கவலைப்பட வேண்டும். அதற்கு எதிராக போராட வேண்டும். இந்திய மக்கள் பொறுப்பு வாய்ந்த உலக மக்களாக செயல்பட வேண்டும். அதேசமயம், பணக்கார நாடுகள் வளரும் நாடுகளை பாதிக்காத வகையில் செயல்பட முன்வர வேண்டும்.
நதிகளை இணைப்பது தொடர்பான இரண்டு மற்றும் மூன்று திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. திட்ட வடிவம் தற்போது தயாராக உள்ளது. கென் - பெட்வா பகுதியும் நதி நீர் இணைப்புக்கு உள்படுத்தப்படும் பகுதியாகும். இங்கு சோதனை அடிப்படையில் நதி நீர் இணைப்பு மேற்கொள்ளப்படும்.
பெட்வா நதி நீர் இணைப்பு மூலம் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் ஏறக்குறைய தயார் நிலையில் உள்ளது. இருப்பினும் மிகுந்த எச்சரிக்கையோடு இதைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழல், வனப் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும். அவசர கதியில் மேற்கொண்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பாக அமைந்துவிடலாம் என்றார்.
சமீபத்தில் ராகுல் காந்தியும், நதி நீர் இணைப்புத் திட்டத்தால் பேராபத்து ஏற்படும் என்றார். சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும், இது சாத்தியப்படாத திட்டம், செலவு பிடிக்கும் திட்டம் என்று கூறியிருந்தார். தற்போது பிரதமரும் இந்தத் திட்டத்தால் பாதிப்புகள் அதிகம் என்கிறார். எனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நதி நீர் இணைப்புக்கு எதிராக உள்ளதாக கருத்து எழுந்துள்ளது.