தீயணைப்பு துறை-மீட்புப் பணிக்கு மோப்ப நாய்கள்!
சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழக தீயணைப்புத் துறையில் மோப்ப நாய்கள் அடங்கிய மீட்புப் படைப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றங்களின்போது இடிபாடுகளில் சிக்குவோரை கண்டறிந்து காப்பாற்ற ஏதுவாக, தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை வீரர்களுக்கு மீட்புப் பணிகளில் உதவ சிறப்புப் பயிற்சி பெற்ற 6 மோப்ப நாய்கள் கொண்ட இந்தப் படை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த பிரிவு தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார்.
இது குறித்து தீயணைப்புத்துறை இயக்குனர் நடராஜ் நிருபர்களிடம் பேசுகையில்,
மேலைநாடுகளில் மட்டுமே இது போன்ற டாக் ஸ்குவாட் மீட்புப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சுனாமி, பூகம்பம் போன்ற நேரங்களில் மேலைநாடுகளில் இத்தகைய பிரிவை சேர்ந்த நாய்கள் மிகவும் உதவிகரமாக உள்ளன. அத்தகைய பிரிவு இந்தியாவில் தொடங்குவது இதுவே முதல்முறையாகும்.
டால்மேஷன், லேப்ரடார் வகைகளை சேர்ந்த இந்த நாய்களுக்கு, போலீஸ் மோப்ப நாய்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியில் இருந்து மாறுபட்ட பயிற்சி வழங்கப்படும். இதற்காக, தாம்பரத்தில் பயிற்சியிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, சென்ட்பெர்னார்டு எனப்படும் உயர்ரகத்தை சேர்ந்த 2 நாய்களை வாங்க உள்ளோம். இவை உயர்ரக நாய்களாகும். குளிர்பிரதேசமான ஆல்ப்ஸ் மலைப்பகுதியை (சுவிட்சர்லாந்து) பூர்வீகமாகக் கொண்டவை அவை.
அவற்றை, நீலகிரி போன்ற குளிர்ந்த இடங்களில் மீட்புப் பணிக்கு பயன்படுத்திக் கொள்வோம். இதுதவிர, கோவை, மதுரை, திருச்சி போன்ற மற்ற நகரங்களிலும் இந்த மோப்ப நாய் மீட்புப்பிரிவு விரைவில் தொடங்கப்படும் என்றார்.