புதிய தொழிற்சாலை தயாராகும்வரை லோக்கலில் தயாராகும் நானோ!!
மேற்கு வங்காளத்தின் சிங்கூரில் நானோ தொழிற்சாலை அமைக்க முடியாமல் போன பிறகு, அந்தத் தொழிற்சாலையை குஜராத்துக்குக் கொண்டுபோனது டாடா.
ஆனால் எதிர்பார்த்த வேகத்தில் அந்தத் தொழிற்சாலை தயாராகவில்லை. வரும் 2010-ன் இறுதியில்தான் இந்தத் தொழிற்சாலை உற்பத்திக்குத் தயாராகும். அதுவரை நானோவை ஜார்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களின் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைகளில் வைத்து தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது.
இப்போது அந்த திட்டத்தில் ஒரு மாறுதலைச் செய்துள்ளது டாடா.
இதுகுறித்து லண்டன் எகானமிஸ்ட் இன்னோவேஷன் கான்பரன்ஸில் டாடா மோட்டார்ஸ் துணைத் தலைவர் ரவிகாந்த் கூறுகையில், டாடாவின் பிரத்தியேக தொழிற்சாலைப் பணிகள் இன்னும் முடியாததால், தற்காலிகமாக நானோ தயாரிப்பை அந்தந்தப் பகுதியில் இருக்கும் சிறு காராஜ் உரிமையாளர்களை வைத்தே தயாரிக்க முடிவு செய்துள்ளோம்.
டாடாவுக்காக இந்தப் பணியை அவர்கள் மேற்கொள்வார்கள். நாங்கள் இதை நானோ என்று அழைத்தாலும், அஸெம்பிளர்ஸ் அப்படி சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த வகையில் ஆண்டுக்கு 10000 கார்களுக்கு மேல் தயாரிக்கும் திட்டமுள்ளது" என்றார்.
வெளிநாட்டு கார்கள் அல்லது நுகர்பொருள் சாதனங்களின் உதிரி பாகங்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு இந்தியாவில் அஸெம்பிள் செய்து குறிப்பிட்ட பிராண்டின் பெயரில் விற்பனை செய்யப்படுவதப் போன்றதே இதுவும் என்று பின்னர் டாடா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நானோ தொழிற்சாலை தயாரானதும் ஆண்டுக்கு 360000 கார்கள் அதிலிருந்து தயாராகுமாம். அதே நேரம் இந்த வகை 'அஸெம்பிளர்ஸ் நானோ' தயாரிப்பும் தொடருமாம்.