மகாராஷ்டிரத்தில் காங்-பவார் சண்டை நீடிப்பு-நாளை முதல்வர், து.முதல்வர் பதவியேற்பு?
மும்பை: கூட்டணி அரசில் தங்களது கட்சிக்கான அமைச்சர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கான துறைகளை ஒதுக்குவது தொடர்பாக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி இடையே கடும் மோதல் தொடர்ந்து வரும் நிலையில் நாளை முதல்வரும் துணை முதல்வரும் பதவியேற்பர் என்று தெரிகிறது.
மகாராஷ்டிரத்தி்ல் கடந்த 22ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 144 இடங்களைப் பிடித்துள்ளது. பகுஜன் விகாஸ் கட்சி மற்றும் சில சுயேச்சைகள் ஆதரவுடன் இந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
மகாராஷ்டிரத்துடன் சேர்ந்து தேர்தலை சந்தித்த அருணாச்சலப் பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் புதிய அரசுகள் பதவியேற்றுவிட்ட நிலையில் இந்த மாநிலத்தில் மட்டும் பத்து நாட்களுக்கு மேலாக இழுபறி நிலை நீடித்து வருகிறது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்வது, துறைகளை பகிர்ந்து கொள்வது ஆகிய விவகாரங்களில் மோதல் நீடித்து வருகிறது.
டெல்லியில் சோனியா- தேசியவாத காங்கிரஸ் தலைவர் பவார் ஆகியோர் பல சுற்று பேச்சு நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இன்று காலை வரை பதவிச் சண்டை, பணம் கொழிக்கும் துறைகளைப் பகிர்ந்து கொள்வது ஆகியவை தொடர்பாக காங்கிரசும் பவார் கட்சியும் மோதிக் கொண்டுள்ளன.
சபாநாயகர் பதவி, உள்துறை, நிதி, மின்சாரம், ஊரக வளர்ச்சி போன்ற துறைகளை ஒதுக்குவதில் தான் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது.
இதற்கிடையே நடப்பு சட்டசபையின் ஆயுட் காலம் நாளை (3ம் தேதி) நிறைவடைகிறது. இதனால் புதிய சட்டசபை கூட்டத் தொடர் நாளை தொடங்கியாக வேண்டும்.
ஆனால் இந்தக் கூட்டம் நடக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது. புதிய அரசு பதவியேற்று அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டித் தான், சட்டசபைக் கூட்டத்தை கூட்டுமாறு கவர்னருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அதன்பிறகே சட்டசபை கூட்டம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட இயலும்.
இந் நிலையில் காங்கிரசுக்கு 22 அமைச்சர்கள், தேசியவாத காங்கிரசுக்கு 20 அமைச்சர்கள் என்ற பார்முலாவை முன் வைத்து இரு தரப்பும் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இலாகா விவகாரத்தில் சண்டை நீடித்தால் இன்று முதல்வராக அசோக் சவான், துணை முதல்வராக சகன் புஜ்பால் மற்றும் சில மூத்த தலைவர்கள் மட்டும் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.
இலாகா பகிர்வில் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடேய புதிய அரசு நாளைக்குள் பதவி ஏற்காவிட்டால், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக் கோருவோம் என்று பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாஜகவின் இந்த அதிரடி அறிவிப்பால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உடனடியாக பதவி ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே புதிய அரசு அமைப்பது தொடர்பாக இன்று (திங்கள்கிழமை) ஆளுநரிடம் கடிதம் அளிக்க உள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி: பாஜக-சிவசேனா மோதல்...
இதற்கிடையே சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்பதில் பாஜக, சிவசேனா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் பாஜக 46 இடங்களிலும், சிவ சேனை 44 இடங்களிலும் வென்றன. அதிக இடங்களை வென்ற கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என பாஜக கூறுகிறது.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை எண்ணிக்கை தீர்மானிப்பதில்லை என சிவசேனை கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இதனால் அங்கும் சிக்கல் நீடிக்கிறது.
அசோக் சவாண் வீட்டில் சாய் பாபா:
இந் நிலையில் மகாராஷ்டிர முதல்வராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள அசோக் சவாணின் வீட்டுக்கு சத்ய சாய் பாபா நேற்று வந்தார். அவரது குடும்பத்தாருக்கு நேரில் வந்து ஆசி வழங்கினார்.
சவாண் வீட்டில் நடந்த பிரார்த்தனையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் பங்கேற்றனர்.
அசோக் சவாண் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமாக இருந்தவருமான எஸ்.பி.சவாணும் பாபாவின் தீவிர பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.