கிரிக்கெட் ஸ்டேடியத்தில் துப்பாக்கி தோட்டாக்கள்
டெல்லி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒரு நாள் போட்டி நடந்த டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் துப்பாக்கித் தோட்டக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை இங்கு கிரிக்கெட் போட்டி நடந்தது. அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஏழு பிஸ்டல் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்டேடியத்தின் 2வது தளத்தில் உள்ள கழிப்பறையில் பேப்பரில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த 7 துப்பாக்கி வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். இந்த வெடிகுண்டுகள் 10-15 அடியைச் சேர்ந்த துப்பாக்கியில் பொருத்தக் கூடியவை என கண்டறியப்பட்டுள்ளது
இதுதொடர்பாக ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடைமுறையை மீறிய டோணி, யுவராஜ்:
இந் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் பாதுகாப்பு நடைமுறையை மீறி ஹோட்டலை விட்டு வெளியே சென்றதாக பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்திடம் சண்டிகர் போலீஸார் புகார் செய்துள்ளனர்.
இதுகுறித்து எஸ்.பி. டூன் கூறுகையில், முதலில் யுவராஜ் சிங் பாதுகாப்புத் தடுப்புகளை மீறி தாஜ் ஹோட்டலை விட்டு இரவு 7.30 மணிக்கு வெளியே சென்றார். தனது நண்பர் ஒருவரின் காரில் அவர் சென்றார்.
சில நிமிடங்களில் கேப்டன் டோணி, ஹர்பஜன் சிங் ஆகியோரும் எந்தத் தகவலும் அளிக்காமல் வெளியேறியுள்ளனர்.
இதுகுறித்து வீரர்களின் பாதுகாப்பு பொறுப்பை மேற்கொண்ட டிஎஸ்பி ரோஷன் லால் எனக்கு அறிக்கை அளித்துள்ளார். இதன் அடிப்படையில், பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதி, சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளோம்.
வீரர்களின் பாதுகாப்பு முழுமையாக இருக்க வேண்டுமானால், வீரர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஆனால் இதுபோன்ற சிலரின் செயல்களால் எங்களது பணி கடினமாகி விடுகிறது என்றார்.
இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும் புகார் செய்யவுள்ளது பஞ்சாப் போலீஸ்.
இதுகுறித்து ஹோட்டல் ஊழியர் ஒருவர் கூறுகையில் தனது தந்தை யோகராஜ் சிங்கை சந்திப்பதற்காக நண்பருடன் யுவராஜ் சிங் சென்றதாக தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற 4வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று மாலை சண்டிகருக்கு இந்திய கிரிக்கெட் அணியினர் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.