கோவிலில் உல்லாசம் விவகாரம்: ஏட்டிடம் தகராறு, அர்ச்சகரின் தந்தை கைது
காஞ்சிபுரம்: கோவிலில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த வழக்கு தொடர்பாக அர்ச்சகரிடம் விசாரணைக்கு சென்ற தலைமைக் காவலரிடம் தகராறு செய்த அர்ச்சகரின் தந்தை கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே கிழக்கு ராஜவீதியில் மச்சேசப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேவநாதன் (35) என்பவர் அர்ச்சகராக இருந்தார்.
இவர் கருவறைக்குள்ளேயே இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்தது தொட்ரபாக வீடியோ வெளியானது.
இது தொடர்பாக காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆரம்பித்த நிலையில் அர்ச்சகர் தேவநாதன் தலைமறைவாகி விட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக அர்ச்சகர் தேவநாதனைத் தேடி காவல் நிலைய ஏட்டு கோபால் பெரிய காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெருவுக்கு சென்றார். அங்கு தேவநாதனின் தந்தை சுப்பிரமணிய குருக்களிடம் (57) உங்கள் மகன் தேவநாதன் எங்கு இருக்கிறார்' என்று விசாரித்தார்.
அப்போது சுப்பிரமணிய குருக்கள் ஏட்டு கோபாலைத் திட்டியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து ஏட்டு தந்த புகாரின் அடிப்படையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப் பதிவு செய்தார்.
பின்னர் சுப்பிரமணிய குருக்களை போலீசார் கைது செய்து காஞ்சீபுரம் துணை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே தேவநாதனைப் பிடிக்க தனிப்படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.