கலைஞர் காப்பீடு-கூடுதல் வசூல் செய்தால் நடவடிக்கை
சிதம்பரம்: கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் கூடுதலாக பணம் வசூலிக்கும் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம், குறிஞ்சிப்பாடி மற்றும் காட்டுமன்னார் கோவிலில், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில், சிதம்பரம் அரசு பெண்கள் பள்ளியில் நடந்த முகாமை, சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் துவக்கி வைத்து பேசுகையில்,
கலைஞர் காப்பீடு திட்டத்தில், சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள பிரபல மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் கிராமக மக்களுக்கு கூட சிகிச்சை அளிக்கின்றனர்.
கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஒரு கோடி குடும்பங்களுக்கு மேல் பயனடையும் வகையில் திட்டமிடப்பட்டு, 78 லட்சத்து 17 ஆயிரம் குடும்பங்களுக்கு புகைப்படும் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 27 லட்சத்து நான்காயிரம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில், இரண்டு லட்சத்து 64 ஆயிரத்து 934 குடும்பங்களுக்கு புகைப்படும் எடுக்கும் பணி நடந்து வருகிறது. அதில் 22 ஆயிரத்து 172 குடும்பங்களுக்கு காப்பீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது. அவ்வாறு வசூல் செய்தால் அந்த மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.