வந்தவாசி திமுக எம்எல்ஏ மரணம்
சென்னை: வந்தவாசி (தனி) தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.பி. ஜெயராமன் புற்று நோயால் இன்று மரணமடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி எம்எல்ஏவான ஜெயராமனுக்கு இரைப்பை புற்று நோய் ஏற்பட்டது. இதையடு்த்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் அறுவை சிகிச்சை நடந்தது.
ஆனால், 2 மாதங்களில் மீண்டும் நோய் தீவிரமாகவே மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்று நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அகற்றப்பட்டன.
சமீபத்தில் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் கோமா நிலைக்குச் சென்றார்.
கடந்த 31ம் தேதி அடையார் புற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் இறந்தார். அவருக்கு வயது 56.
தகவல் அறிந்த முதல்வர் கருணாநிதி காலை 8.45 மணிக்கு அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர்கள், தொண்டர்களின் அஞ்சலிக்குப் பின் அவரது உடல் சொந்த ஊரான செங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் மாலை அடக்கம் செய்யப்படுகிறது.
விவசாயியான ஜெயராமன் பள்ளி பருவத்தில் இருந்தே திமுகவில் ஈடுபாடு கொண்டவர். 2006ம் ஆண்டு வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் முதன்முதலில் போட்டியிட்டு வென்றார்.
அவருக்கு எல்லம்மாள் என்ற மனைவியும், கமலகண்ணன், மதியழகன், நந்தகோபால், துரைமுருகன் ஆகிய 4 மகன்களும், தீபா என்ற மகளும் உள்ளனர்.
ஜெயராமன் மரணம் காரணமாக, திருச்செந்தூர் தொகுதியையும் சேர்த்து சட்டசபையில் காலியாகியுள்ள இடங்கள் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.