அப்பல்லோ மருத்துவமனை சிறப்பு தபால்தலை
சென்னை: அப்பல்லோ குழும மருத்துவமனைகளின் மருத்துவ சேவையை கெளவுரவிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.
இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி சாந்தா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.
சிறப்பு தபால்தலை தொகுப்பை மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஏ.ராசா வெளியிட, முதல் பிரதியை துணை ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியி்ல் இந்திய அஞ்சல்துறை தலைவர் பி.மூர்த்தி, அப்பல்லோ குழும மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் ஸ்டாலின் பேசுகையில்,
மருத்துவத் துறையில் அயராத உழைப்பு, மனித குலத்திற்கு மகத்தான மருத்துவ சேவை, தொலைநோக்கு பார்வை ஆகியவற்றுக்கு கிடைத்திருக்கிற அங்கீகாரம்தான் இந்த சிறப்பு தபால் தலை. 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனை இன்று ஓர் ஆலமரம் போல் விரிந்து பரந்து உலகம் முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது.
54 நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனையைப் பயன்படுத்தி வருகிறார்கள். மகத்தான சேவையைப் பாராட்டும் வகையில் மத்திய அரசு தபால்தலை வெளியிட்டு கெளரவித்திருக்கிறது. தபால் தலை வெளியிடப்படும் முதல் மருத்துவமனை அப்பல்லோதான் என்றார்.
அமைச்சர் ராசா பேசுகையில்,
மந்திரி ராசா, அப்பல்லோ மருத்துவமனைக்கு நினைவு தபால் தபால் வெளியிடுகிறாரே, அவருக்கும், அப்பல்லோ மருத்துவமனைக்கும் ஏதோ தொடர்பு இருக்குமோ? என்று பத்திரிகைகள் எழுதினால் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. தபால்தலை வெளியிடுவதற்கான அனைத்து தகுதிகளையும் அப்பல்லோ மருத்துவமனை பெற்றுள்ளது என்றார்.