கர்நாடக சிக்கலை தூண்டிவிட்ட அனந்த்குமார்!
பெங்களூர்: கர்நாடகத்தில் முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிரான கோஷ்டிகளுக்கு மறைமுகமாக ஆதரவு தந்து சிக்கலை அதிகரி்த்து வருவதாக பாஜக மூத்த தலைவரான அனந்த்குமார் மீது நேரடியாக குற்றம் சாட்டப்படுகிறது.
பெங்களூர் தெற்கு தொகுதி எம்பியான அனந்த்குமார், முதல்வர் பதவிக்கு குறி வைத்துள்ளார். ஆர்எஸ்எஸ்சின் முழு ஆசிர்வாதம் பெற்ற இவருக்கு அத்வானியும் மிக நெருக்கம்.
பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் என்ற பதவியில் டெல்லியில் இருந்தபடியே கர்நாடக அரசியலை குழப்பி வரும் அனந்த்குமாருக்கும் எதியூரப்பாவுக்கும் எப்போதுமே ஏழாம் பொறுத்தம் தான்.
இப்போது எதியூரப்பாவுக்கு எதிராகக் கிளம்பியுள்ள அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், சபாநாயகர் ஜெதகீஷ் ஷெட்டார், எம்எல்ஏ ரேணுகாச்சாரியா தலைமையிலான எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அனந்த்குமாரின் மறைமுக ஆசிர்வாதம் உண்டு.
முதலில் இந்த கோஷ்டிகளைத் தூண்டிவிட்டு எதியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து விரட்டுவது, அடுத்து அத்வானி-ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் தானே முதல்வராவது என்ற திட்டத்துடன் அனந்த்குமார் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.
கடந்த மாதம் 25ம் தேதி ரெட்டி சகோதரர்களை பெங்களூரில் வைத்து அனந்த்குமார் சந்தித்த பிறகு தான் பிரச்சனையே ஆரம்பானது என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில். மேலும் ஜெகதீஷ் ஷெட்டாரையும் அவர் தனியே சந்தித்து தூண்டிவிட்டார் என்கிறார்கள்.
ஆனால், கர்நாடகத்தில் சிக்கல் ஆரம்பமானவுடன் ஒன்றுமே தெரியாதவர் மாதிரி டெல்லியிலேயே முகாமிட்டு்ள்ளார் அனந்த்குமார். பெங்களூரில் ரெட்டி-எதியூரப்பா ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இரு கோஷ்டிகளையும் அருண் ஜேட்லி சந்தித்துப் பேசியபோதும் அனந்த்குமாரைக் காணவில்லை.
பிரச்சனைக்கு இவர் தான காரணம் என்று மீடியாக்களில் செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ள நிலையில் இப்போது பெங்களூரில் எதியூரப்பாவுடனும் டெல்லியில் நடக்கும் ஆலோசனைகளிலும் தலையைக் காட்ட ஆரம்பித்துள்ளார் அனந்த்குமார்.
ரெட்டி வீட்டில் பாம்பு:
இந் நிலையில் முதல்வருடன் மோதி வரும் வருவாய்த்துறை அமைச்சர் கருணாகர ரெட்டியின் பெங்களூர் வீட்டில் பாம்பு நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை முதல்வர் எதியூரப்பா குக்கே சுப்பிரமணிய கோவிலுக்குச் சென்று துலாபாரம் நடத்தி வழிபட்டுவிட்டு வந்த நிலையில் ரெட்டி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நாகப் பாம்பு நுழைந்தது. இது ரெட்டிக்கு கெட்ட சகுனம் என்கிறார்கள் ஜோதிடர்கள் சிலர்.
ஆனால், இந்த ஜோதிடர்கள் எதியூரப்பா ஆதரவாளர்கள் என்கிறது ரெட்டி தரப்பு, வீட்டில் சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தியபடி
எடியூரப்பாதான் முதல்வர்: ராஜ்நாத்...
டெல்லியில் முகாமிட்டு எதியூரப்பாவை மாற்றியே ஆக வேண்டும் என ரெட்டி சகோதரர்கள் திட்டவட்டமாகக் கூறி வரும் நிலையில் ராஜ்நாத் சிங், எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, அனந்த குமார், ராம் லால் ஆகியோர் கலந்து கொண்ட பாஜக உயர் மட்டக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துத்துப் பின் நிருபர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், எதியூரப்பாவே முதல்வராக நீடிப்பார் என்று அறிவித்தார்.
ஷோபாவை நீக்க பாஜக மேலிடம் சம்மதம்?:
அதே நேரததில் ரெட்டி சகோதரர்களை சமாதானப்படுத்த எதியூரப்பாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் ஷோபாவை பதவி நீக்கம் செய்ய கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதே போல முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையைத் தவிர ரெட்டிகளின் மற்ற எல்லா கோரிக்கைகளை ஏற்கவும் பாஜக மேலிடம் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
அதில் முக்கியமானவை, அமைச்சர் பதவியிலிருந்து ஷோபாவை நீக்குவது, முதல்வரின் முதன்மைச் செயலாளர் வி.பி. பளிகாரை இடமாற்றம் செய்வது, பெல்லாரி, காடக் மாவட்டங்களில் இருந்து மாற்றப்பட்ட உயர் அதிகாரிகளை மீண்டும் அதே இடத்தில் பணியில் அமர்த்துவது,
முக்கிய முடிவுகளை எடுக்க முதல்வர், மாநில பாஜக தலைவர், பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச்.என். அனந்த குமார், மற்றும் மூத்த அமைச்சர் ஒருவர் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்குழு அமைப்பது,
சபாநாயகர் ஜகதீஷ் ஷெட்டருக்கு அமைச்சர் பதவி, ரெட்டி சகோதரர்களின் ஆதரவு அமைச்சர்களுக்கு மாவட்ட பொறுப்புகைத் தருவது ஆகியவை.
இந்தக் கோரிக்கைகளை செயல்படுத்த பாஜக மேலிடம் ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது நடந்தால் எதியூரப்பா எந்த அதிகாரமும் இல்லாத டம்மி முதல்வராக செயல்படும் நிலை உருவாகும்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைக்கவும், மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெல்ல ரெட்டி சகோதரர்கள் முக்கிய பங்கு வகித்ததால் அவர்களது இந்த கோரிக்கைகளை மேலிடம் ஏற்றுக் கொண்டுள்ளது.
எடியூரப்பா சென்னை வருகை?
இதற்கிடையே கர்நாடக முதல்வர் எதியூரப்பா இன்று சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் எதற்காக வருகிறார் என்பது தெரியவில்லை.
சமீபத்தில் அவர் சென்னையில் தங்கி சிகிச்சை பெற்றது நினைவுகூறத்தக்கது.
6ம் தேதி கேபினட் கூட்டம்:
இந் நிலையில் வரும் 6ம் தேதி தனது அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் எதியூரப்பா கூட்டியுள்ளார்.