ரெய்டு.. மருத்துவமனையில் மது கோடா
வருமானத்தை மீறி பல்லாயிரம் கோடி பணம் சேர்த்தது, ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமல் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி சட்டவிரோதமாக சுரங்கள், ஹோட்டல்கள் என சொத்துக்கள் வாங்கியது ஆகியவை தொடர்பாக கடந்த சனிக்கிழமை மது கோடாவின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
8 நகரங்களில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ. 2,000 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துப் பரிமாற்றங்கள், ஹவாலா பண பறிமாற்றம் நடந்தது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து வருமான வரித்துறையினரால் மது கோடா விசாரிக்கப்பட்டார். ஆனால், அவர் விசாரணைக்கு சரிவர ஒத்துழைக்கவில்லை என வருமானவரித் துறை குற்றம் சாட்டியது.
இந் நிலையில் மீண்டும் அவரை வருமான வரித்துறையினர் விசாரிக்க இருந்த நிலையில், அவருக்கு திடீரென 'சில உடல் நலக் கோளாறுகள்' ஏற்பட்டன.
இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் போய் படுத்துக் கொண்டுள்ளார் கோடா.
மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அவருக்கு வந்துள்ள 'நோய்' பற்றிக் கூறமுடியும் என மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
வயிற்று வலிக்காக இரு வாரங்களுக்கு முன்பு மது கோடாவுக்கு ஆபரேஷன் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.