ஆஸி-நியூசி தூதர்கள் வெளியேற பிஜி உத்தரவு
பிஜி நாட்டின் உள் விவகாரங்களில் இந்த இரு நாடுகளும் தலையிடுவதாகக் கூறி இந்த உத்தரவைப் பிறப்பித்துளளார் அந் நாட்டு அதிபரான கமாண்டர் பிராங் பைனிமரமா.
சில மாதங்களுக்கு முன் இவரது ஆட்சிக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளை கூண்டோடு பதவி நீக்கம் செய்த பிராங், அந் நாட்டு நீதிமன்றங்களை நடத்த இலங்கையைச் சேர்ந்த 7 நீதிபதிகளை நியமித்துள்ளார்.
ஜனநாயகத்துக்கு விரோதமான இந்தப் பணியை ஏற்க வேண்டாம் என ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அரசுகள் இலங்கையிடம் கோரிக்கை வைத்தன. ஆனால், அதை இலங்கை ஏற்கவில்லை.
தனது நாட்டைச் சேர்ந்த 7 மூத்த நீதிபதிகளுக்கு நீண்ட கால விடுப்பு கொடுத்து பிஜி தீவில் பணியாற்ற அனுமதி அளித்தது.
இந் நிலையில் பிஜி தலைநகர் சுவாவுக்கு செல்வதற்காக ஆஸ்திரேலியா வழியாக செல்ல இலங்கை நீதிபதிகள் விசா கேட்டு விண்ணப்பத்திருந்தனர்.
ஆனால், அவர்களுக்கு விசா வழங்க ஆஸ்திரேலிய அரசு மறுத்துவிட்டது. ஆஸ்திரேலியாவின் இந்தச் செயலை நியூசிலாந்தும் ஆதரித்துள்ளது.
இதையடுத்து அந்த நீதிபதிகளை தென் கொரியா வழியாக வருமாறு பிஜி அரசு கூறியுள்ளது.
இந் நிலையில் பிஜியின் நீதித்துறையை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் முயல்வதாகக் கூறி அந் நாட்டுத் தூதர்களை திரும்பிச் செல்லுமாறு பைனிமரமா உத்தரவிட்டுள்ளார்.
2006ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தார் பைனிமரமா என்பது குறிப்பிடத்தக்கது. இதை நீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்ததால் அனைத்து நீதிபதிகளையும் கூண்டோடு பதவி நீக்கம் செய்தார்.